வடக்கில் 80 உத்தியோகத்தர்களை பணி நீக்கம் செய்ய சதி - உயர் அதிகாரிகள் மீது கடும் விமர்சனம்..
வட மாகாண சபை இயங்காமல் இருக்கும் தற்போதையை நிலையைப் பயன்படுத்தி, 80ற்கும் மேற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவிகளை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு மாகாண நிர்வாக உயர் அதிகாரிகள் தீவிரமாக முயற்சிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
வடமாகாண சபைக்கு உட்பட்ட திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை நேரடியாகக் கண்காணிப்பதற்காக கடந்த 2006ஆம் ஆண்டு 82 அபிவிருத்தி உத்தியோகத்தர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்
கடந்த 2013ஆம் ஆண்டு வட மாகாணசபை இயங்க ஆரம்பித்த நிலையில், 2017ஆம் ஆண்டு அப்போதைய பிரதம செயலாளர் நா.பத்திநாதனால் 82 பேருக்கு இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
போரால் பாதிக்கப்பட்ட இந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் செயற்பாடுகள் தவிர்க்க முடியாததாக அமைந்தது. எனினும், அதன் பின்னர் இந்த ஆளணியின் எண்ணிக்கை 20ஆகக் குறைக்கப்பட்டதுடன், அவர்கள் எந்த நோக்கத்துக்காக நியமனம் பெற்றனரோ அதற்கு முற்றிலும் பொருத்தமற்ற மத்திய நிர்வாக அலகுகளுடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

இந்த இணைப்புக்குப் பின்னர் மத்திய அரசாங்கத்தின் நிர்வாக அதிகாரிகள் சிலர் குறித்த அபிவிருத்தி உத்தியோகத்தர்களைத் மிகவும் தரக்குறைவாக விமர்சிப்பதுடன், பொருத்தமற்ற துறைகளுக்கும், திணைக்களங்களுக்கும் இடமாற்றம் வழங்கி வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
போதிய ஆளணி உள்ள திணைக்களங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவதால் அந்தத் திணைக்களங்கள் அவர்களை ஏற்காத நிலையும் உள்ளதாகக் கூறப்படுகின்றது. இதனால் மிகக் குறுகிய காலத்திலேயே அவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட இடமாற்றங்களைச் சந்திக்க நேர்ந்துள்ளது.
வடக்கின் அபிவிருத்தித் திட்டங்களில் மிக வினைத்திறனாக செயற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்களை தற்போதைய உயர் அதிகாரிகள் இவ்வாறு அலைக்கழிக்க வைப்பதும், அவர்களை மன உழைச்சலுக்கு உள்ளாக்குவதும் பல்வேறு தரப்பினர்களிடத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.