எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயக மக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும்
தமிழர் தேசத்தின் இறைமை என்பது நிலத்தில் மட்டுமல்ல, நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்ற நிலையில் எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் தாயக மக்களின் சம்மதம் பெறப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
கடந்த மே 22,23ம் நாட்கள் இடம்பெற்றிருந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின் போது, 'சுயநிர்ணய உரிமையும், ஈடுசெய் நீதியிலான பிரிந்து செல்லலும்' , 'இந்தியப் பெருங்கடலும் இலங்கைத்தீவில் பெருகிவரும் சீன ஆதிக்கமும்', 'தமிழ்நாட்டு ஆட்சி மாற்றமும் இந்தியாவை நோக்கிய செயற்பாடும்' ஆகிய தொனிப்பொருட்களில் பல்வேறு அறிஞர் பெருமக்கள் பங்கெடுத்திருந்த கருத்தமர்வுகள் இடம்பெற்றிருந்தன.
இதில் இலங்கையில் சீனாவின் கால்பதிப்பு பற்றியும், இலங்கையின் சீன துறைமுக பட்டிணம் பற்றியும் அமர்வில், தமிழர் தேசத்தின் இறையை என்பது நிலத்தில் மட்டுமல்ல நிலத்தை அண்டிய கடலிலும் உண்டென்பது உறுதியாக வலியுறுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து மேற்குறித்த நிலைப்பாட்டினை தனது அமர்வின் நிறைவுரையில் வலியுறுத்திய பிரதமர் வி.உருத்திரகுமாரன்,
தமிழ்மக்களின் சம்மததினை பெறாது எந்தவொரு அந்நிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கும் எதிராகத் தாயக மக்களும், தாயக தமிழ் அரசியல் தலைவர்களும் போராட வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.
இதேவேளை ,இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் குறிப்பாக இலங்கைத்தீவில் அதிகரித்து வரும் சீனாவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான மூலோபாயமாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்துடன் நமது உறவுகளைச் சுருக்கிக் கொள்ளாமல், ஆசிய-பசுபிக் பிராந்தியங்களுடன் உறவுகளை வளர்த்துக் கொள்ளக் கவனம் செலுத்த வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது.
குறிப்பாக இந்தியாவுடன் மட்டும் ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தாமல் ஆசிய-பசுபிக் பிராந்திய பெருங்கடல் நாடுகளுடனும் செயற்பாடுகளை விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
கோவிட் வைரஸ் பெருந்தொற்று காரணமாக நேரடி அமர்வினை நடத்த முடியாத நிலையில், இணையவழியே இடம்பெற்றிருந்த இந்த அரசவை அமர்வில், ஈழத்தமிழர்களுக்கான அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு பொறிமுறை குறித்த அதிக கவனம் செலுத்தப்பட்டிருந்தது.
அமைச்சுகளின் அறிக்கை, அரசவை உறுப்பினர்களது கருத்துரைகள், மேற்சபை
உறுப்பினர்களுடனான கூட்டமர்வு உட்பட பல்வேறு விடயங்களுடன் இடம்பெற்றிருந்த
இரு நாள் அரசவை அமர்வினை துணை அரசவைத் தலைவர் ரஜனி தேவி செல்லத்துரை அவர்கள்
நடாத்தியிருந்தார்.