தமிழ்த் தேசியப்பரப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் குறித்து ஆராய்வு
தமிழ்த் தேசியப்பரப்பில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிளவு ஏற்படவுள்ளதாக வெளியாகின்ற கருத்துக்கள் தொடர்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைமைக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டதுடன், எதிர்வரும் 18ஆம் திகதி மத்தியகுழு கூடி ஆராயவிருக்கிறது என்று இயக்கத்தின் செயலாளர் நாயகமும்,மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம்(ஜனா) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியிலும் அரசியல் பரப்பிலும் ஏற்பட்டுள்ள தமிழ்த் தேசிய அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா)இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் தமிழ்த் தேசியப் பரப்பிலும் தற்போது பேசுபொருளாக இருக்கும் நாளை (13) நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் 46வது கூட்டத்தொடருக்கு முன்னதாக ஆணையாளருக்கு தமிழ்த் தேசியப் பரப்பிலிருந்து பல முனைகளிலும் கடிதங்கள் எழுப்பட்டுள்ளன.
இருந்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளினாலும் எழுதப்பட்ட கடிதங்களில் பல குழப்பங்பள் மக்கள் மத்தியில் இருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடைந்துவிட்டது என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவடையாது என்றும் கருத்துக்கள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு கட்சியினரை ஒரு கட்சியினர் வசைபாடிக் கொண்டும் இருக்கின்றன.
இந்த வேளையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்குழுக் கூட்டம் மெய்நிகர் வழியாக நேற்றைய தினம் (11) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் இக்கருத்துக்கள் சம்பந்தமாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டு இந்தக் குழப்பத்திற்கு முடிவுகாண்பது தொடர்பில் ஆராயப்பட்டது. இருந்தும் இது சம்பந்தமாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்தியகுழு எதிர்வரும் 18ஆம் திகதி மெய்நிகர் வழியாகக் கூடி தீர்க்கமான முடிவொன்றை எடுக்க இருக்கிறது.
கட்சிகளின் அமைப்பு ரீதியிலான கட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதும் கலந்துரையாடப்படுவதும் வழமையானதே. தமிழ்த் தேசியம் சார்ந்தும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டிருக்கும் ஒரு கட்சி என்ற வகையில் தொடர்ச்சியான முயற்சிகளை எமது கட்சி எடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.