திருகோணமலையில் சேனைப் பயிர் செய்கையாளர்களுக்கும், வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல்
திருகோணமலை - ரொட்டவெவ, மிரிஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சேனைப் பயிர் செய்கையாளர்களுக்கும், வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த யுத்த காலம் தொடக்கம் இன்று வரை தமது வாழ்வாதார தொழிலாக விவசாயம், மீன்பிடி மற்றும் சேனைப் பயிர் செய்கை போன்றவற்றை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது சேனைப் பயிர் செய்கைக்காக தங்களுடைய காணிகளுக்குள் செல்லும் போது வன இலாகா அதிகாரிகள் செல்லக் கூடாது எனத் தடுப்பதாகவும், பயமுறுத்துவதாகவும் அப்பகுதியிலுள்ள மக்கள் தெரிவிப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் நேற்றையதினம் குறித்த பகுதிக்கு வன இலாகா அதிகாரிகள் சென்று சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பயிர்ச் செய்கையாளர்களை அரசுக்குச் சொந்தமான காணியிலிருந்து செல்லுமாறு கூறியதையடுத்து பொது மக்களுக்கும், வன இலாகா அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
யுத்த காலத்தின் போது தமது அன்றாட தொழிலான சேனை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வந்ததாகவும், மிரிஸ்வெவ மக்களின் நலன் கருதி மஹதிவுல்வெவ குளத்திற்குச் செல்லும் வீதியானது கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கமநெகும, மகநெகும திட்டத்தின் கீழ் இரண்டு குளங்கள் புனரமைக்கப்பட்டுள்ளதாகவும் சேனை பயிர்ச்செய்கையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆனாலும் கடந்த வருடம் சேனை பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை “காடுகளை வெட்டாமல் தமக்குரிய காணிகளில் சேனை பயிர்ச்செய்கையை முன்னெடுக்குமாறு” அரசியல் வாதிகளினால் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ச்சியாக பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்ததாகவும், இம்முறை வன இலாகா அதிகாரிகள் அதனை அரசுக்குச் சொந்தமான காணி எனக் கூறி வருவதாகவும், வழக்குகளைப் பதிவு செய்ய முயற்சி செய்வதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சேனை பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வரும் மக்களுக்கு யுத்த காலத்தின் போது பயன்படுத்தப்பட்ட காணிகளையே உரியவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.