முழுமையான கதவடைப்பு இராணுவ பிரசன்னங்களை குறைக்க ஒரு வலுவான போராட்டம்! தவிசாளர் வே.கரிகாலன்
முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள், பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கட்சி பேதங்களை, மத பேதங்களை கடந்து ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் இராணுவ பிரசன்னங்களை குறைப்பதற்கான ஒரு வலுவான போராட்டமாக அமையும் என புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் தவிசாளர் வே.கரிகாலன் தெரிவித்துள்ளார்.
புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இன்றையதினம் (14.08.2025) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முழுமையான கதவடைப்பு
அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 18ம் திகதி, கதவடைப்புக்கான அழைப்பானது இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர், பொதுசெயலாளர் மற்றும் எமது கட்சி சார்பாக விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் தொடர்ச்சியான இராணுவ பிரசன்னம் அதிகரித்து காணப்படுகின்றது. புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட வர்த்தகர்கள் , பொது அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் 18ம் திகதி திங்கட்கிழமை கதவடைப்பு போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்கி எங்களுடைய பிரதேசங்களில் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்ற இடங்களில் இருந்து அகன்று அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இருக்க வேண்டும்.
முழுமையான கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதன் மூலம் சர்வேச நாடுகளுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் தங்களுடைய பிரதேசங்களில் இராணுவ பிரசன்னங்களை குறைக்க ஒரு வலுவான போராட்டமாக இது அமைய இருக்கின்றது.
இளைஞனின் கொலை
அதுமட்டுமல்லாமல் அண்மையில் நடந்த புதுக்குடிக்குடியிருப்பு பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட முத்தையன்கட்டு பகுதியில் இராணுவத்தினால் பிடிக்கப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கொலை என்ற விடயம் இன்றுவரை மர்மமாகவே இருக்கின்றது.
அண்மையில் நீதியான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால கூறியிருந்தமை ஊடகங்கள் மூலம் அறியக்கூடியதாக இருந்தது. ஆனால் கடந்த காலங்களில் 30 ஆண்டு காலமாக தமிழ் மக்கள் இவ்வாறாக இராணுவத்தினராலும், அரச படைகளாலும் பல வழிகளில் எங்களுடைய பிரதேசங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு, பல வகையில் மக்களுக்கான துன்பியல் சம்பவங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இதுவரைக்கும் அதற்கான நீதியான விசாரணைகள் எதுவும் இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்ததாக தெரியவில்லை. அவ்வாறு இருக்கும்போது இராணுவ பிரசன்னமானது தொடர்ச்சியாக எங்களுடைய பகுதிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும். இந்த கதைவடைப்புக்கு கட்சி பேதங்களை கடந்து, மத பேதங்களை கடந்து அனைவரும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 21 மணி நேரம் முன்

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
