வவுனியா பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு
வவுனியா பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் சேவை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளதாக வவுனியா நகரசபை தலைவர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் வவுனியா நகரசபை தலைவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
குறித்த விடயம் தொடர்பாக இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கூறுகையில்,
எந்தவித முன்னறிவித்தலுமின்றி நகரசபைத்தலைவரான என்னை பொலிஸ் நிலையம் அழைத்து கைது செய்தனர். பொலிஸாருடைய செயற்பாடு பக்கச்சார்பான செயற்பாடாகவே இருந்தது.
அதிகார பலமும், அரசியல், பணபலமும் இருந்தால் எதையும் செய்யலாம் என்ற நிலைமையை நேற்று அறிய முடிந்தது. எனவே சாதாரண மக்களுக்கான நீதி இந்த பொலிஸ் நிலையங்களில் எப்படிக் கிடைக்கும் என்பது கேள்வியாகவுள்ளது.
அத்துடன் எமது உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக பொலிஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது பொலிஸாரின் அசமந்தப்போக்கே. தனிப்பட்ட நபர்களிற்காக அரச உத்தியோகத்தர்களை கைது செய்வதும், அச்சுறுத்துவதும் எந்தவகையில் நியாயமான செயற்பாடாக இருக்க முடியும்.
இப்படியான பொலிஸாரால் இலங்கை பொலிஸ் திணைக்களத்திற்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. ஒரு நீதிபதியைப் போல வவுனியா பொலிஸ் பொறுப்பதிகாரி எனக்கு பதிலளித்தார். பொலிஸ் நிலையம் நீதிமன்றம் போலவே இயங்குகின்றது.
எனவே பொலிஸாரின் அசமந்தப்போக்கு மற்றும் அரசியல் பின்னணியினை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
அத்துடன் பொலிஸ் சேவை ஆணைக்குழுவிற்கு இது தொடர்பாக முறைப்பாடு ஒன்றினை வழங்கியுள்ளோம், வடமாகாண ஆளுநர் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாட்டினை பதிவு செய்யவுள்ளோம்.
அத்துடன் குறித்த விடுதியினூடாக நகரசபைக்குச் சேரவேண்டிய மிகுதி பணத்தினை நீதிமன்றமூடாக பெற்றுக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம்.
அத்துடன் வாடிவீடு என்பது நகரசபையின் சொத்து அதனை முழுமையாகப் பெற்றுக்கொள்வதற்கான தீர்மானங்களையும் எடுத்துள்ளோம்.
குறித்த விடுதிக்கு அருகில் பிரபல பாடசாலை மற்றும் இந்து இளைஞர் சங்கம், சாய்பாபா மடம், நீதிபதியின் வதிவிடம் ஆகியன அமைந்துள்ளன.
எனவே குறித்த இடத்தில் மதுபானசாலை ஒன்று தேவையில்லை என்று நாம் கருதுகின்றோம். எனவே வேறு பொது விடயங்களிற்காக அந்த இடத்தினை பயன்படுத்துவதற்குத் தீர்மானித்துள்ளோம்.
காலப்போக்கில் அது சரிவரும். அத்துடன் மதுபானத்தை விற்று
குடியைக் கெடுக்கும் செயலை நகரசபை செய்யாது எனத் தெரிவித்துள்ளார்.