சிவில் சமூக செயற்பாட்டாளர் சிறையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு
அரசாங்க அமைச்சருடன் மோதலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் சிறைச்சாலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் ஏற்பாட்டாளர் அசேல சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அசேல சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பத்துடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு வலியுறுத்தி, சிறைக்கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கும் குழு பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
அசேல சம்பத் ஏப்ரல் 13ஆம் திகதி கொம்பனித்தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 14ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 19 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிறையில் இருந்தபோது அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு அப்போது அச்சம் வெளியிட்டிருந்தது.
போகம்பறை சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் வைக்கப்பட்டிருந்த, அசேல சம்பத் ஏப்ரல் 20ஆம் திகதி காலை 9.30 மணி முதல் 10 மணி வரை கடமையில் இருந்த ஜகத் என்ற அதிகாரியால் தடியால் தாக்கப்பட்டதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் காரணமாக அசேல சம்பத் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக கைதிகளின் உரிமைகள் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.
அசேல சம்பத் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து குற்றவியல் விசாரணை நடத்தவும், இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறும் முறைப்பாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அந்த அமைப்பின் செயலாளர் சுதேஷ் நந்திமல் சில்வா, தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா மற்றும் தேசிய அமைப்பாளர் நிசார் மௌலானா ஆகியோர் கையெழுத்திட்டு குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
தினமும் ஊடகங்கள் முன்னிலையில் தோன்றும், தமது அமைப்பின் தலைவர் அசேல சம்பத்திற்கு எதிராக நீண்ட காலத்திற்கு முன்னதாக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை, கொம்பனித்தெரு பொலிஸார் திடீரென நிறைவேற்றியுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கருத்தின் பின்னர், அசேல சம்பத்திற்கு எதிராக சட்டத்தை செயற்படுத்துகின்ற போர்வையில், இந்த கைது இடம்பெற்றுள்ளதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பு முன்னர் கூறியுள்ளது.
அசேல சம்பத் ஏப்ரல் 14ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டு நீர்கொழும்பு பல்லன்சேன சிறைச்சாலையின் தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் ஏப்ரல் 17ஆம் திகதி போகம்பறை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் மையத்திற்கு மாற்றப்பட்டார்.
அவர் ஏப்ரல் 19ஆம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டதோடு, ஏப்ரல் 26 அன்று விடுதலை செய்யப்பட்டார்.
நுகர்வோர் விவகார அதிகார சபை அலுவலகத்திற்கு வருகை தந்து, அலுவலக ஊழியர்களின் பணிக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக வெளியிடப்பட்ட திறந்த பிடியாணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.