பிரதேச செயலாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக தெரிவித்து வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசுவமடு மாணிக்கபுரத்தை சேர்ந்த குமாரவேலு அகிலன் என்ற முன்னாள் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரே இன்றையதினம் குறித்த முறைப்பாட்டை பதிவுசெய்துள்ளார்.
இதன்போது ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர், எமது கிராமத்தின் கிராம அலுவலரை இடமாற்றம் செய்யமுற்பட்ட வேளையில் பொது அமைப்புக்கள் ஒன்றுசேர்ந்து இடமாற்றத்தினை மேற்கொள்ள வேண்டாம் என்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தோம்.
இது தொடர்பாக பிரதேச செயாலாளருக்கும், அரச அதிபருக்கும் கடிதம் அனுப்பியிருந்தோம். அதன் பின்னர் குறித்த பிரதேச செயலாளர் எனக்கு தொலைபேசியிலே அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
என்னை கவனமாக இருக்குமாறும், கிராம அபிவிருத்தி சங்கத்தில் தலைவராக இருக்க முடியாது என்றும் சமூக சேவைகளில் ஈடுபடவேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக அரசியலில் ஈடுபட்டால் இந்த அரசாங்கம் என்ன செய்யும் என்று தெரியும்தானே என்று மிரட்டினார்.
எனவே எனது தனிமனித சுதந்திரத்தில் தலையிட்டமையாலும், கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அச்சுறுத்தியமைக்காகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்றையதினம் முறைப்பாட்டை செய்துள்ளேன். அவர் என்னோடு
உரையாடிய விடயங்கள் தொடர்பான குரல்பதிவுகள் அனைத்தையும் நான் ஆதாரமாக வைத்துள்ளேன் என்றார்.