ராஜித சேனாரத்னவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறையீடு செய்த தேசிய மக்கள் சக்தி
நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் (Rajitha Senaratne) கருத்து தொடர்பில் தேசிய மக்கள் சக்தி (National People's Power), தேர்தல்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் (Ranil Wickramasinghe) இணைந்து கொண்ட சேனாரத்ன, வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்களை வாக்களிக்க இலங்கைக்கு வருவதைத் தடுக்கும் நோக்கில் யூடியூப் தளம் ஒன்றில் அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் முறையிடப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி எழுதியுள்ள கடிதத்தில், இந்த முறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
அச்சுறுத்தும் அறிக்கைகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வாக்களிக்க இலங்கைக்கு வர வேண்டாம் என புலம்பெயர் தொழிலாளர்களை, ராஜித சேனாரத்ன அச்சுறுத்தியுள்ளதாக, ஹந்துன்நெத்தி தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் பல மில்லியன் புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தநிலையில், அவர்களை அச்சுறுத்தும் அறிக்கைகளை வெளியிடுவது சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்கு தடையாக இருப்பதாக ஹந்துன்நெத்தி கூறியுள்ளார்.
இதன்படி, 1981ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 78 (1) சரத்தை, ராஜித சேனாரத்ன தேவையற்ற செல்வாக்கு செலுத்தி, அதனை மீறியுள்ளார் என ஹந்துன்நெத்தி குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |