உயிரிழந்த கடற்படை அதிகாரிக்கு நட்டஈடு: இந்திய படகுகளை விற்க தீர்மானம்
இந்திய (India) கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியின் மரணத்திற்கு இழப்பீடு வழங்குவதற்காக, பறிமுதல் செய்யப்பட்ட இந்திய இழுவை படகுகளை விற்பனை செய்வதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அண்மையில், யாழ்ப்பாணம் (Jaffna) - நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் நடவடிக்கையின் போது குறித்த கடற்படை அதிகாரி உயிரிழந்தார்.
இந்த நிலையில், உயிரிழந்த கடற்படை அதிகாரியின் குடும்பத்திற்கு நட்டஈடு வழங்குவதற்கான முன்மொழிவை கடற்றொழில் அமைச்சு பரிசீலித்து வருகின்றது.
நிதி பற்றாக்குறை
ஆனால், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ஏனைய அபிவிருத்தி முயற்சிகள் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளின் காரணமாக அமைச்சுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் போதிய பணத்தை ஒதுக்குவதில் சிரமம் எதிர் கொள்ளப்படுகிறது.
எனவே, இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கு கணிசமான தொகையைத் திரட்டுவதற்காக, கடந்த காலங்களில் பறிமுதல் செய்யப்பட்டு, அரச சொத்தாக அறிவிக்கப்பட்ட இந்திய இழுவை படகுகளை ஏலம் விடுவது குறித்து அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
இதற்காக, தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய அடிமட்ட இழுவை படகுகள் பற்றிய அறிக்கைகளை, வடக்கில் உள்ள கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகங்களில் இருந்து, அமைச்சகம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |