கிழக்கு மாகாண காணி பிரச்சினைகளுக்கு விசேட குழு நியமனம்
கிழக்கு மாகாணத்தில் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோத காணி கையகப்படுத்துதல், சட்டவிரோத காணி நிரப்புதல் மற்றும் சட்டவிரோத கட்டுமானங்களைத் தடுப்பதற்கான ஒரு விசேட திட்டத்தைச் செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு முன்மொழிவின்படி, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
காணிப் பிரச்சினைகளுக்கான உடனடித் தீர்வு
மேலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள காணிப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்குவதற்கும், நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கும் ஒரு விசேட குழு நியமிக்கப்படவுள்ளது.
தென் மாகாணத்தின் முன்னாள் காணி ஆணையாளரும், தற்போதைய தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளருமான சேனக பல்லியகுருகே இந்த குழுவிற்குத் தலைமை வகிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொடர்புடைய அரச நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களும் இதில் இடம்பெறவுள்ளனர்.
அரசியல் அதிகாரம் அல்லது செல்வாக்கைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத காணி கையகப்படுத்துதல்கள் மற்றும் காணி நிரப்புதல்களைத் தடுப்பதற்காக, பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் தலைமையில் ஒரு விசேட பொலிஸ் குழுவை நிறுவவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறையை மேம்பாடு
இதற்கிடையில், 5 அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பு வர்த்தக நோக்கங்களுக்காக வழங்கப்பட்டும், இதுவரை திட்டப்பணிகளுக்காக பயன்படுத்தப்படாத காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள இலங்கை மகாவலி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

இவ்வாறு கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டு, முறைசார்ந்த அமைப்பின் கீழ் அந்தப் பகுதி மக்களின் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும்.
அத்துடன், கிழக்குக் கடற்கரையின் சூழலியல் அமைப்பைப் பாதுகாக்கும் அதே வேளையில், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ஒரு விசேட திட்டமும் தயாரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.