செஞ்சோலை படுகொலையின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் - இராணுவம், பொலிஸார் கெடுபிடி
முல்லைத்தீவு - செஞ்சோலை பகுதியில் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று இடம்பெறும் நிலையில் அஞ்சலி செலுத்துவதற்காக படுகொலை இடம்பெற்ற செஞ்சோலை வளாகத்துக்குச் சென்ற மாணவிகளின் பெற்றோர் இராணுவம் மற்றும் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
2006ஆம் ஆண்டு இதே போன்றதொரு நாளில் இலங்கை விமானப்படையினரின் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 54 மாணவிகள் உட்பட 61 பேரின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் இடம்பெறுகிறது.
இந்த நிலையில் செஞ்சோலை வளாகத்துக்கு செல்லும் வள்ளிபுனம் இடைக்கட்டு வீதி முழுவதும் இராணுவத்தினர், பொலிஸார், புலனாய்வாளர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இதனால் பூக்கள் மாலைகளோடு படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த பெற்றோர் ஏமாற்றத்துடன் திருப்பி சென்றுள்ளனர்.
மேலும் அந்த வீதியால் செல்பவர்கள் பொலிஸார், இராணுவத்தினரால் விசாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.