கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தின் பெண் அதிகாரி கைது
கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தின் பெண் காணிப் பதிவாளர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவணங்களை வெளிநபர்களுக்கு வழங்கி, குற்றச்செயல்களுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொழும்பு காணிப் பதிவாளர் அலுவலகத்தின் காணிப் பதிவாளர் என தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு முறைப்பாடு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளது.

அதற்கமைய, நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு சந்தேகநபர் அழைக்கப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான காணிப் பதிவாளர், அலுவலகத்திலிருந்த பதிவேடுகள், தொகுதிகள், உறுதிப்பத்திரங்களின் 2ஆம் பிரதிகள் மற்றும் தொகுதிகளில் பிணைக்கப்பட்டிருந்த ஆவணங்களை வெளிநபர்களுக்கு வழங்கியுள்ளார்.
போலி ஆவணங்கள்
மேலும் அவரால் திட்டமிட்ட குற்றச்செயல்களுக்கு உதவியது மற்றும் சதித்திட்டம் தீட்டியது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், சட்டபூர்வமான உரிமையாளர்களிடமிருந்து போலியான ஆவணங்களை தயாரித்து காணிகளை அபகரித்தமையும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பன்னிப்பிட்டிய, ருக்மலே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய பெண் ஒருவராகும்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வணிகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின், நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது.