கொழும்பு ஊடகவியலாளர் தடுப்புக்காவல் விவகாரம்! நீதிமன்றம் அழைப்பாணை
கொழும்பு ஊடகவியலாளரொருவரின் தடுப்புக்காவல் தொடர்பில் விளக்கமளிக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
குறித்த அலைவரிசை இணைய ஊடகத்தின் பணிப்பாளரை கைது செய்த பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளமை சட்டரீதியற்றதென நேற்று முன் தினம் மாலை, நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா விஷேட வாதம் ஒன்றினை முன் வைத்துள்ளார்.
அதனை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இந்த அழைப்பாணையை பிறப்பித்துள்ளார். இந்த கைது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர்.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி யாழ்ப்பணத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்னர் கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பால் கூறப்பட்டது.
இந்நிலையிலேயே நேற்று முன் தினம், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் சார்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் விஷேட வாதங்கள் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசாவால் முன் வைக்கப்பட்டது.
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர் தற்போது தங்காலை தடுப்பு முகாமிலும் பணிப்பாளர் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு தலைமையகத்திலும் 3 மாதங்களுக்கு மேலாக தடுத்து வைக்கபட்டுள்ளதாக இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்ய பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9(1) ஆம் அத்தியாயம் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சரினால் வழங்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவு அவசியமாகும்.
எனினும் இந்த விவகாரத்தில் தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டதாகவோ அல்லது தடுப்பு காவலில் இருக்கும் கைதிக்கு அவ் உத்தரவின் பிரதிகள் வழங்கப்பட்டதாகவோ கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இன்று வரை எவ்வித அறிவித்தல்களும், அறிக்கைகளும் இம்மன்றுக்கு வழங்கப்படவில்லை. அவர்களின் கைதும் தடுத்து வைப்பும் சட்டத்திற்கு முரணானது. ஊடகவியலாளர் தற்பொழுது தங்காலை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
சட்ட விரோதமான கைது, தடுப்புக் காவலுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்ய ஊடகவியலாளரின் அறிவுறுத்தல்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியாமல் உள்ளது.
நாட்டில் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலைமையை உள்ள நிலையில், நேரில் சந்திக்க சந்தர்ப்பம் வழங்கப்படா விடினும் குறைந்த பட்சம் தொலைபேசி ஊடாகவேணும் அறிவுறுத்தல்களை பெறுவதற்கு நடவடிக்கை வேண்டும். அவருடன் பலமுறை தொலைபேசியில் கதைக்க எனது கனிஸ்ட சட்டத்தரணி பலமுறை விண்ணப்பித்த போதிலும் பொலிசாரினால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அது மட்டுமல்ல, பயங்கரவாத தடைச்சட்டத்தின் 9(1) ஆம் அத்தியாயம் பிரகாரம் பாதுகாப்பு அமைச்சரினால் வழங்கப்படும் தடுப்புக் காவல் உத்தரவு 3 மாதங்களின் பின்னர் புதுப்பிக்கப்படவேண்டும்.
எனது சேவை பெறுநர் கைது செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்தவாரம் முடிவடைந்து விட்டது. இன்று வரை குறித்த தடுப்புக் காவல் கட்டளை தொடர்பாகவோ அவர்களின் கைது தொடர்பாகவோ எந்த அறிக்கையும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட வில்லை.
எனவே இந்த விடயங்களை ஆராய்ந்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பனிப்பாளரை இந்த மன்றுக்கு அழைத்து இந்த விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்க உத்தரவிட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா கோரியுள்ளார்.
அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே, பயங்கரவாத தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரிக்கு இம்மாதம் 13ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பனை அனுப்பியுள்ளார்.
கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஊடகவியலாளர் சார்பில் சட்டத்தரணிகளான ஆர்னோல்ட் பிரியந்தன,தர்மஜா தர்மராஜா, பிரிந்தா சந்திரகேஸ்ஹ் ஆகியோருடன் ஜனாதிபதி சட்டத்தரணி ம கே.வி.தவராசா ஆஜராகியமை குறிப்பிடத்தக்கது.