தடுப்பூசி விடயத்தில் மாறி மாறி பேசும் கூட்டமைப்பினர்! திலீபன் எம்.பி குற்றச்சாட்டு
தடுப்பூசி விடயத்தில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வவுனியாவில் ஒன்றும் மன்னாரில் வேறொன்றும் பேசுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் தெரிவித்தார்.
வவுனியா - தாண்டிக்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்தின் திட்டங்கள் வவுனியாவில் சிறந்த முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. அதற்கு இங்கிருக்கும் அதிகாரிகளே காரணம். அவர்களிற்கு நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.
அரசின் சௌபாக்கியா திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் முறையாக இடம்பெறவில்லையாயின் பிரதேச செயலாளரையோ என்னையோ தொடர்புகொண்டு முறையிட முடியும். அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுப்போம்.
பத்து வருடங்களிற்கு மேலாக நீங்கள் பயன்படுத்துகின்ற காணிகளில் வன இலாகாவினரால் எல்லை போடப்பட்டிருந்தால் அல்லது காணியினை விட்டு வெளியேறுமாறு தெரிவித்திருந்தாலோ நீங்கள் எங்களை தொடர்பு கொள்ள முடியும். அவ்வாறான காணிகளை உங்களுக்கே பெற்றுத்தருவதற்கு அமைச்சர் டக்ளஸ் முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்.அதற்கான பலன்கள் கிடைத்துள்ளது.
இதேவேளை பசில் ராஜபக்சவின் வருகையால் நாட்டின் பொருளாதாரம் மாற்றமடையும். என்பது நிச்சயம். அவ்வாறான மாற்றத்தினை விரைவில் நீங்கள் காணலாம்.
வவுனியா மக்களிற்கான தடுப்பூசி விடயம் தொடர்பாக ராஜாங்க அமைச்சருடன் பேச்சு வார்த்தையினை முன்னெடுத்திருக்கின்றேன். கிடைக்கின்ற தடுப்பூசிகளை சந்தோசமாக பெற்றுக்கொள்ளாமல். அதில் உள்ள குறைகளையே அனைவரும் பேசுகின்றனர்.
உடனடியாக தடுப்பூசி கிடைக்காமையினால் கடந்த வாரம் ஆயிரம் தடுப்பூசிகளை இராணுவத்தின் மூலம் பெற்றிருந்தோம். வன்னியை சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மன்னார் மாவட்டத்தில் பேசுகிறார்.
அரசாங்கத்துடன் பேசி மன்னார் மாவட்டத்திற்கு தடுப்பூசிகளை பெற்றுகொடுத்திருக்கிறோம் என்று. ஆனால் அதே நாடாளுமன்ற உறுப்பினர் வவுனியாவில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கூறுகிறார். தடுப்பூசி விடயத்தில் வவுனியாவை அரசாங்கம் புறக்கணித்துள்ளது என்று இவை எல்லாம் அரசியல் சுயஇலாபத்திற்காக பேசக்கூடிய விடயம் என்றார்.