கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்டத்தின் நிறைவு விழா
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை, கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்துடன் (CICL) இணைந்து செயற்படுத்திய பூஸ்ட்டர் கிராண்ட் செயற்திட்டத்தின் (Booster Grant Project) நிறைவு விழா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடந்தேறியது.
இச்செயற்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஆசிய - பசுபிக் மெப்பிங் ஹப் (Asia -Pacific Mapping HUB) ஆல் வழங்கப்பட்டிருந்தது.
இவ்விழாவில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர். வல்லிபுரம் கனகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததோடு சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உப அரசாங்க அதிபர் சு.ஸ்ரீகாந்த், கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர் த.பிரபாகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
அத்தோடு, இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக பீடாதிபதி, பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் மாணவர்கள் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.
நவீன தொழில்நுட்பம்
புவியியற்துறையின் தலைவரும் செயற்திட்ட இணைப்பாளருமான தவப்பிரபா சச்சிதானந்தத்தின் வரவேற்புரை மற்றும் தலைமையுரையுடன் இந்நிகழ்வு ஆரம்பமானது.
அடுத்ததாக கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் (CICL) பணிப்பாளர் இந்நிகழ்விற்கான ஆரம்ப உரையை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்வில் செயற்திட்டத்தினுடைய செயற்பாடுகள், அது கடந்து வந்த பாதை என்பவை தொடர்பான அனைத்து விடயங்களும் புவியியற் துறையின் பேராசிரியர் கந்தையா ராஜேந்திரமால் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த செயற்திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட 39 கிராம நிலதாரி பிரிவுகளுக்கும் நவீன தொழில்நுட்பத்தினை உள்ளடக்கிய 'open street map' ஊடாக தயாரிக்கப்பட்ட படங்கள் (maps) மட்டக்களப்பு மாவட்ட உப அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டன.
அத்துடன், கிழக்குப் பல்கலைக்கழகத்தினுடைய படங்கள் (maps) மற்றும் வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்கள் என்பன இந்நவீன தொழிநுட்பத்தினூடாக படமாக்கப்பட்டு கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரிடம் கையளிக்கப்பட்டது.
அத்துடன், இந்த செயற்திட்டத்தின் செயற்பாடுகளை உள்ளடக்கிய தொகுப்பு, 'Open Street Map' சார்ந்த விடயங்களை உள்ளடக்கிய சஞ்சிகை, 'GeoMapVistaEUSL' என்ற வலையத்தளம் ஆகியன இந்நிகழ்வின் போது வெளியிட்டு வைக்கப்பட்டமையும் சிறப்புக்குரிய விடயமாகும்.
இச்செயற்திட்டத்தினூடாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிவோர்கள், அரசாங்க உத்தியோகத்தர்களான நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவாசாய போதனாசிரியர்கள், நகரசபை ஊழியர்கள், ஆசிரியர்கள் போன்றோருக்கு OpenStreetMapஇனூடாக படங்கள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டிருந்தன.
மேலும், இலங்கையின் ஏனைய பல்கலைக்கழகங்களான சப்ரகமுவ பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம், தென்கிழக்குப் பல்கலைக்கழகம், ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் களனி பல்கலைக்கழகம் ஆகியவற்றிலுள்ள மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்குமான பயிற்சிகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புவியியற் துறையினால் நடாத்தப்பட்டிருந்தது.
முக்கியமான மைல்கல்
இம்முன்னணி பல்கலைக்கழகங்களிலிருந்து பயிற்சியை பெற்றுக்கொண்ட மாணவர்களும் அவர்களுக்கு வழிகாட்டிய பேராசிரியர்களும் கிழக்குப் பல்கலைக்கழகத்திலிருந்து வழங்கப்பட்ட பயிற்சி தொடர்பான கருத்துக்களை இந்நிகழ்வில் பகிர்ந்துக் கொண்டனர்.
இதன்போது அவர்கள் பயிற்சியை முன்னெடுத்த புவியியற்துறையினையும், கிழக்குப் பல்கலைக்கழகத்தினையும் பாராட்டியிருந்தனர்.
இந்த பயிற்சியை பெற்றுக்கொண்டவர்களுக்கான சான்றிதழ்கள், இப்பயிற்சியை பெற்றுக்கொண்டதனூடாக படங்களை தயாரித்து உயர் பங்களிப்பினை வழங்கிய (High contributor) மாணவர்களுக்கும் சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி கொளரவிக்கப்பட்டன.
இந்த பரிசில்களை பெற்றுக்கொள்ள பயிற்சி வழங்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துக்கொண்ட மட்டக்களப்பு மாவட்ட உப அரசாங்க அதிபர் இச்செயற்திட்டத்தினூடாக சமூகத்திற்கு வழங்கிய உன்னதமான சேவையையிட்டு புவியியல் துறையின் தலைவர் உட்பட புவியியல் துறையில் இச்செயற்திட்டத்தினை முன்னெடுத்த அனைவரையும் பாராட்டியதுடன் இதனை வழிநடாத்திய உபவேந்தர், கைத்தொழில் மற்றும் சமூக இணைப்பு மையத்தின் (CICL) பணிப்பாளரையும் ஏனைய நிர்வாகிகளையும் பாராட்டியிருந்தார்.
இது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் புவியியற்துறையினால் செயற்படுத்தப்பட்ட முக்கியமான மைல்கல் நிகழ்வாக அமைந்திருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |