வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய காற்றுச் சுழற்சி தற்போது இலங்கைக்கு தென்கிழக்கு திசையில் 792 கி.மீ. தொலைவில் காணப்படுவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இது மேலும் மேற்கு திசை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் கிடைக்கும் மழை எதிர்வரும் 03ஆம் திகதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில்..
நாளை முதல் (27) மழை சற்று தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை உருவாகியுள்ள காற்றுச் சுழற்சி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்று வேகமாக குறிப்பாக மணிக்கு 30 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே வேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் கடந்தொழிலாளர்களை கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதேவேளை எதிர்வரும் மார்ச் மாதத்தில் கணிசமான நாட்கள் மழையுடன் கூடிய நாட்களாகவே அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |