திருமண மண்டபத்தில் மோதல் - கடமைக்கு சென்ற பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது
கொட்டக்கலை நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று(17) இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகளை அந்தக் குழுவினர் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
மோதலை அமைதிப்படுத்தச் சென்ற பணியில் இருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளே இரு குழுக்களாலும் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர்.
பிராந்திய வைத்தியசாலையில் அனுமதி
இதனை தொடர்ந்து பொலிஸ் அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு மேலும் திம்புள்ள பத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிற பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்று அங்கு வந்தபோது, அவர்களும் தாக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களை திம்புள்ள பத்தனை பொலிஸ் அதிகாரிகள் பெரும் முயற்சிக்குப் பின்னர் கைது செய்துள்ளனர்.
கடுமையாக மோதலில் ஈடுபட்ட மூன்று பேரும், தாக்கப்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் கொட்டக்கலை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொட்டகலை நகரில் நடந்த மோதலைத் தொடர்ந்து அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது மேலும் குறித்த மோதலை கட்டுப்படுத்தவும் பாதுகாப்பிற்காகவும் தலவாக்கலை, லிந்துலை மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையங்களிலிருந்து கூடுதல் பொலிஸ் குழுவினர் வரவழைக்கப்பட்டுள்ளது.






