கர்தினால் ரஞ்சித்துக்கு அச்சுறுத்தல் - அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்
கர்தினால் மல்கம் ரஞ்சித்துக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் இதனை தெரிவித்துள்ளார்.
கர்தினால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயங்காது
இந்தவிடயம் தொடர்பில் மேலும் பேசிய அவர், அவ்வாறான அச்சுறுத்தல் தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை என நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபையின் தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேவைப்பட்டால் கார்டினாலுக்கு பாதுகாப்பு வழங்க அரசாங்கம் தயங்காது என்றும் அவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை வலியுறுத்தி கர்தினால் தொடர்ந்தும் குரல் கொடுத்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.