சிவில் சமூக முன்னெடுப்புக்கள் தான் வலுவான அரசியல் தளங்களை உருவாக்கும்! பிலிப் முருகையா
சிவில் சமூக முன்னெடுப்புக்கள் தான் வலுவான அரசியல் தளங்களை உருவாக்கும் என ரிங்கோ வன் சிவில் சமூக கட்டமைப்பின் பிரதம செயற்பாட்டாளர் பிலிப் முருகையா (Philip Murugaya) தெரிவித்துள்ளார்.
திருகோணமலை - முருகாபுரி பகுதியிலுளள தனியார் விடுதியொன்றில் நேற்று இடம்பெற்ற TRINCO ONE CIVIL ALLIANCE என்ற அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
திருகோணமலை மாவட்டத்தில் பல முக்கிய வளங்கள் காணப்பட்டும் அது சிறந்த முறையில் பாவிக்கப்படாமையினால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடுகளை வழங்க அதிருப்தி அடைகின்றனர்.
இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள 17 அபிவிருத்தி இலக்குகளை மையமாகக் கொண்டு எமது சேவைகள் தொடரவுள்ளன.
திருகோணமலை மாவட்ட மக்களின் சமூக பொருளாதார எழுச்சி, நீதி பொறிமுறைகள் கல்வி மற்றும் பண்பாட்டியல் மக்கள் வாழ்வாதாரம் போன்ற துறைகளில் அதிக கவனம் செலுத்தி காத்திரமாக வழி நடத்த உள்ளளோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதில் 19க்கும் மேற்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், புத்திஜீவிகள், முயற்சியாளர்கள், பண்பாட்டியல் அமைப்புகள், அரசியலாளர்கள், நிபுணர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



