சிவில் சமூக ஆர்வலர் சிரந்த அமரசிங்க கைது...!
சிவில் சமூக ஆர்வலர் சிரந்த அமரசிங்க (Chirantha Amarasinghe) கொழும்பு புலனாய்வுத்துறை தலைமையகத்திற்கு அருகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (27.02.2023) மாலை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனை சிரந்த அமரசிங்கவின் சட்டத்தரணி உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்பிறகு அமரசிங்க கறுவாக்காடு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படாத குற்றச்சாட்டுகளில் அவர் பொலிஸார் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பிற்கு விரோதமானது
2020 நவம்பரில் 'கோட்டாஃபெயில்' என்று தலைப்பைச் சமூக ஊடகங்களில் இடுகையிட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியதற்காக அமரசிங்க முன்னர் ஒரு தடவையும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து “தமது கைது அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்று கூறி குற்றவியல் விசாரணைத் துறைக்கு எதிராக அமரசிங்க ஒரு அடிப்படை உரிமை மனுவையும் தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் மார்ச் 22ஆம் திகதியன்று விசாரணைக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.