இலங்கையை விட்டு வெளியேறியுள்ள ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள்! ஏற்பட்டுள்ள சிக்கல்
அரசாங்க வைத்தியசாலைகளில் 20,000 தாதியர்கள் பற்றாக்குறை உள்ளதாக அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரியா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள அரசாங்க தாதியர் அதிகாரிகள் சங்க அலுவலகத்தில் நேற்று (10 ஆம் திகதி) செய்தியாளர் சந்திப்பை நடத்தியபோது சமன் ரத்னபிரியா இதனை குறிப்பிட்டுள்ளார்.
பாரிய வேலைநிறுத்த போராட்டம்
தாதியர் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க கலந்துரையாடல் நடத்தாத சுகாதார அமைச்சர் உட்பட தற்போதைய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர்கள் பாரிய வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு, தாதியர்கள் விடுப்பு எடுத்து வெளிநாட்டில் தாதிய தொழிலைத் தொடரும் வாய்ப்பு இரத்து செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக, ஐந்து ஆண்டுகள் விடுப்பு எடுத்து பொருளாதார சிக்கல்களை தீர்க்கும் வாய்ப்பு இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
முந்தைய ஆட்சியில் இந்த நாட்டில் டொலர்களை சம்பாதிக்க தாதியர்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு தற்போதைய ஆட்சியால் இரத்து செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
இதன் காரணமாக, தாதியர்கள் தற்போது அரசாங்க தாதிய சேவையை கைவிட்டு வெளிநாடு செல்ல ஆசைப்படுவதாகவும் ரத்னபிரியா கூறியுள்ளார்.
தற்போது கிடைக்கப்பெறும் தரவுகளின்படி, சுமார் 3,000 அரச தாதியர் அதிகாரிகள் விடுப்பு எடுத்து வெளிநாட்டு வேலைக்குச் சென்றுள்ளதாகவும், மேலும் சுமார் 1,500 பேர் அரச தாதியர் சேவையை விட்டு வெளியேறி வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சுமார் 150 தாதியர் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும், நாடு முழுவதும் அமைந்துள்ள 18 தாதியர் பயிற்சிப் பாடசாலைகளில் கற்பித்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.