விஜயதாசவின் அறிக்கை தொடர்பில் சி.ஐ.டி விசாரணை
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீப்பிடித்து எரிந்த எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளியிட்ட அறிக்கை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் நாட்களில் சி.ஐ.டி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை கடற்பரப்பில் தீப்பிடித்து எரிந்ததால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குவதைத் தடுக்க 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாக முன்னதாக அவர் தெரிவித்திருந்தார்.
விஜயதாச ராஜபக்ச
இந்நிலையில், பேராயர் மால்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட பலர் அவரது அறிக்கை குறித்து உடனடியாக விசாரணை நடத்தக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இது குறித்து இலஞ்ச ஒழிப்பு ஆணையம் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையிடம் முறைப்பாடு அளித்திருந்தார்.
இந்த முறைபாடு ஐந்து நீதிபதிகள் கொண்ட நீதிமன்ற அமர்வு முன் மீண்டும் சில தினங்களுக்கு முன்னதாக விசாரிக்கப்பட்டது.
மேலும் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணை தொடர்பான உண்மைகளை எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி கடந்த விசாரணையின் போது, இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் விசாரணை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறையின் விசாரணையின் உண்மைகள் நீதிமன்றத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
250 மில்லியன் டொலர் இலஞ்சம்
(செய்தி பின்னணி - 10.05.2023 அன்று விஜயதாச ராஜபக்ச பின்வரும் கருத்துக்களை நாடாளுமன்றில் முன்வைத்திருந்தார்.)
“எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து விவகாரத்தில் 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கியுள்ளேன்.
கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இவ்விடயம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் இலங்கை பிரஜை ஒருவருக்கு 250 மில்லியன் டொலர் இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக சுற்றாடல் துறை தொடர்பான நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் அஜித் மான்னப்பெரும வாட்சப் செயலி ஊடாக எனக்கு அறிவுறுத்தினார்.
பாரதூரமான விடயம்
சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரி ஒருவரின் உறவினருக்கு இவ்வாறு இலஞ்சம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டது.
இது பாரதூரமான விடயம் என்பதால் அதனை நாடாளுமன்றத்தில் உரையாற்றினேன்
.இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தினேன்.
இதற்கமைய இந்த விடயம் தொடர்பில் புதன்கிழமை (10) குற்றப்பிரிவு திணைக்களத்தில் வாக்குமூலம் வழங்கினேன்" என விஜயதாச கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தையிட்டி விகாரை : என்ன செய்யலாம்](https://cdn.ibcstack.com/article/eafa3708-ce84-4e22-b6a6-518c2b23980b/25-67a890674e00d-md.webp)