மட்டக்களப்பில் நத்தார் தினம் என்றும் துக்கதினம்! சிறிநேசனின் நெகிழ்ச்சியான தகவல்
உலகம் முழுவவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் கிறிஸ்தவர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
இந்த தினத்தை கிறிஸ்தவர்கள் மாத்திரமன்றி ஒளியை விரும்புகின்ற அனைத்து மக்களும் கொண்டாட வேண்டிய ஒரு நாளாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எளிமையாக வாழ்ந்து மக்களின் மனங்களில் இடம்பிடித்தவர்தான் இயேசு நாதர். அந்த வகையில் அவர் பிறப்பை கொண்டாட தடையாக இருக்க கூடாது.
அனைத்து மக்களும் அவரை போற்ற வேண்டும். அவருடைய அருள் அவதாரத்தை வரவேற்க வேண்டும்.
மட்டக்களப்பு மக்கள் வழமையை போன்று கிறிஸ்துமஸ் கொண்டாட தயாராக உள்ள போதிலும் சில சட்டதிட்டங்களுக்குட்பட்டே கொண்டாட தயாராகுகின்றனர்.
இந்த நாள் குறித்து மகிழ்ச்சியடைந்தாலும் மட்டக்களப்பு மக்களுக்கு இன்று ஒரு துக்க தினமாகும். இது போன்றதொரு நாளில் தான் அமரர் ஜோசப் பரராஜ சிங்கம் சுட்டுக்கொல்லப்பட்டார்.
மட்டக்களப்பில் உள்ள தேவாலயத்தில் வைத்து நள்ளிரவில் துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டுக்கொலை செய்தார்கள்.
தமிழ் மக்களுக்காக நீண்ட காலமாக குரல் கொடுத்த ஒருவரான அவரது உயிர் நத்தார் தினத்தில் பறிக்கப்பட்டமை வருத்தமளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.