நாடளாவிய ரீதியில் சித்திரை புத்தாண்டு கொண்டாட்டம்
மலர்ந்திருக்கும் பராபவ புத்தாண்டை முன்னிட்டு, இன்று நாடளாவிய ரீதியாக உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள சித்திரைப்புத்தாண்டு - பராபவ வருடப்பிறப்பு இன்று(14.04.2026) காலை 8: 40 நிமிடத்துக்கும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று காலை 9: 32 நிமிடத்துக்கு பிறக்கின்றது.
தமிழ் - சிங்ள சித்திரைப்புத்தாண்டை முன்னிட்டு கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் காலை வழிபாடுகள் நடைபெற்றன.
விசேட பூஜைகள்
சுபவேளையில் மாமாங்கேஸ்வரருக்கு மருத்துநீர் வைக்கப்பட்டு விசேட அபிசேகம் நடாத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மாமாங்கேஸ்வரருக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதகுரு சிவஸ்ரீ சுகுமார் குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த வழிபாடுகளின்போது நாட்டில் துன்பம் நீங்கி நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, ஆலயத்தில் சித்திரைப்புத்தாண்டை குறிக்கும் வகையில் கை விசேடமும் வழங்கிவைக்கப்பட்டதுடன் ஆலய தரிசனம் செய்தவர்கள் தங்களுக்குள் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொண்டனர்.


புத்தாண்டு தினத்தில் வவுனியா, வைரவபுளியங்குளத்தில் எழுந்தருளியிருக்கும் ஆதிவிநாயகர் திருக்கோவில் தேர்த்திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு புத்தாண்டு வழிபாட்டிலும் தேர்திருவிழா வழிபாட்டிலும் ஈடுபட்டனர். புத்தாண்டை முன்னிட்டு வவுனியா ஆதிநாயகர் ஆலயத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
வவுனியாவில் உள்ள முக்கிய திருத்தலங்களில் ஒன்றாகிய வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் திருக்கோவிலின் மகோற்சவப் பெருவிழா கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.
புத்தாண்டு கொண்டாட்டம்
மகோற்சவப் பெருவிழாவின் 9 ஆம் நாளான இன்று(14.04.2026) தேர்த் திருவிழா மகோற்சவ பிரதம குருக்கள் தலைமையில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

ஆதிவிநாயகர் பெருமானுக்கு மேளதாள வாத்தியங்கள் முழங்க விசேட அபிடேகங்கள் இடம்பெற்று உள்வீதி வலம் வந்த ஆதிவிநாயகப் பெருமான், வெளி வீதியில் பிரவேசித்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அமர்ந்து அடியாவர்களுக்கு அருள்பாலித்துடன், பக்த அடியார்கள் சிதறு தேங்காய் அடித்தும், அங்க பிரதிஸ்டை செய்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும், ஆதிவிநாயகப் பெருமானை அரோகரோ கோசத்துடன் வழிபட ஆதிவிநாயகர் பெருமான் தேரில் வலம் வந்து அடியார்களுக்கு புத்தாண்டு தினத்தில் அருள்பாலித்தார்.
புத்தாண்டு தினத்தில் இத்தேர் திருவிழா இடம்பெற்றமையால் வவுனியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த அடியவர்கள் விநாயகப் பெருமானை வழிபட்டதுடன், தமக்குள் புத்தாண்டு வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர்.

மேலதிக தகவல் - திலீபன்