சீன பாதுகாப்பு அமைச்சரின் வருகை! பின்னணி தொடர்பில் சந்தேகம் எழுப்பும் முக்கியஸ்தர்
சீனா பாதுகாப்பு அமைச்சரின் வருகையின் பின்னணியில் உள்ள முக்கியத்துவம் தொடர்பில் எமக்கு பிரச்சினைகள் காணப்படுகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இலங்கையின் பாதுகாப்பு படைகள் சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பயிற்சிகளை பெறுகின்றன. அவ்வாறானதொரு புறச்சூழலில் அந்த நாடுகளின் பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள் நட்பு நாடுகளுக்கு விஜயம் செய்வது பொதுவானதொரு விடயமாகும்.
ஆனால் சீனா பாதுகாப்பு அமைச்சரின் வருகையின் பின்னணியில் உள்ள முக்கியத்துவம் குறித்து எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளிலுள்ள பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இராணுவத்தளபதி உள்ளிட்ட பாதுகாப்பு பிரதானிகள் உலக பாதுகாப்புடன் தொடர்புடையவர்களாவர்.
அமெரிக்க இராணுவத்தளபதி கூட இலங்கைக்கு விஜயம் செய்ததில்லை. அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வருவதானாலும் இரண்டாம், மூன்றாம் நிலையிலுள்ளவர்களே விஜயம் செய்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.