இலங்கையை இராணுவத் தளமாக மாற்ற முயற்சிக்கும் சீனா! - பென்டகன் எச்சரிக்கை
இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சீன குடியரசின் இராணுவத் தளங்களாக மாறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்புள்ளதாக பென்டகன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் மூலம் அதிக தொலைவில் இராணுவ சக்தியை நிலைநிறுத்த அனுமதிக்கும் வகையில் மிகவும் வலுவான வெளிநாட்டு தளவாடங்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பை நிறுவ சீனா முயல்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.
சீனா தமது இராணுவ பலத்தை பரந்த பிரதேசத்தில் பேணும் நோக்கில், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் தமது இராணுவத்திற்கு வசதி வழங்கும் நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு இடமுள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஜிபூட்டியில் உள்ள அதன் தளத்திற்கு அப்பால், கடற்படை, விமானம், தரை, இணையம் மற்றும் விண்வெளி ஆற்றல் திட்டத்திற்கு ஆதரவளிக்க கூடுதல் இராணுவ வசதிகளை சீனா முன்னெடுத்துள்ளது.
இதன்படி, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, பாகிஸ்தான், இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கென்யா, சீஷெல்ஸ், தான்சானியா, அங்கோலா மற்றும் தஜிகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளை வசதிகளுக்கான இடங்களாக சீனா கருதியுள்ளது.
இந்நிலையில், இலங்கை உள்ளிட்ட குறித்த நாடுகளை சீனா இராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்கு இடமுள்ளதாக பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் சீனா தமது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை வலுப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
