சர்வதேச அரசியலில் அடுத்த நகர்வு! மூன்றாம் முறை சீனாவின் அதிபரானார் ஜி ஜின்பிங்
சீனாவின் அதிபராக மூன்றாம் முறை ஜி ஜின்பிங் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சீனாவில் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கூடும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாட்டில் அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் அதிபராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அதிபர் ஜி ஜின்பிங்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படுவார். அவரே அதிபராகவும் இருப்பார்.
அந்த வகையில் அதிபர் ஜி ஜின்பிங் பதவி காலம் முடிவடைந்த நிலையில் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுக்குழு மாநாடு கடந்த 16ம் திகதி தலைநகர் பிஜீங்கில் தொடங்கியது.
தற்போது மாநாடு முடிவடைந்த நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் மூன்றாம் முறை சீனாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு முதல், அதிபர் பதவியில் ஜி ஜின்பிங் இருந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இம் மாநாட்டில் 3வது முறையாக அதிபராக நீடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஜின்பிங் தீவிரமாக செயல்பட்டார்.
மாநாடு
ஒரு வாரம் நடந்த இந்த மாநாடு நேற்று முடிவடைந்தது. இதில் அதிபர் ஜின்பிங் உரைநிகழ்த்தியபோது, தனது ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளை பட்டியலிட்டு உரையாற்றியுள்ளார்.
மேலும் எதிர்க்கட்சி நடவடிக்கைகள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளார்
இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற சீன ஆளும் கம்யூனிஸ்டு கட்சி மாநாட்டில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. கட்சி செயல்பாடு, அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் 205 உறுப்பினர்களை கொண்ட புதிய மத்திய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழு இன்று காலை கூடி கட்சியின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுத்தது.
இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதில் ஜின்பிங் மீண்டும் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் ஜின்பிங் மூன்றாவது முறையாக அதிபராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பொலிட்பீரோ நிலைக்குழு
7 பேர் கொண்ட கட்சியின் உயர்மட்ட புதிய பொலிட்பீரோ நிலைக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த குழுவுக்கு ஜின்பிங் தலைமை தாங்குகிறார்.
கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஜின்பிங் உரையாற்றியபோது, "நமது பலத்தை ஒன்றாக இருந்து ஒற்றுமையுடன் முன்னேறுவோம் என்றார்.
அமெரிக்காவுடன் மோதல், தைவான் விவகாரம் ஆகியவற்றுக்கு மத்தியில் சீன அதிபராக ஜின்பிங் மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
சீனா அரசியல் வரலாற்றில் சீனாவைக் குடியரசு நாடாக மாற்றி மாபெரும் தலைவராக ஆட்சி அமைத்த மாவோவிற்கு பின்பு, அதிபர் ஜி ஜின்பிங் பெரிய சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்துள்ளார்.
இதற்குப் பின் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் மீண்டும் 5 ஆண்டுகள் ஆட்சியை அமைத்துள்ளார்.
சீனாவில் ஒருவர் இரண்டு முறை மட்டும்தான் அதிபராக இருக்கலாம் என்ற விதிமுறையை 2018ஆம் ஆண்டு அதிபர் ஜின்பிங் நீக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் நிகழ்ச்சியில் பேசிய ஜி ஜின்பிங், கட்சித் தலைவர்களுக்கும் நாட்டு மக்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
69 வயதான அதிபர் ஜி ஜின்பிங் மேலும் 5 ஆண்டுகள் சீனா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், நாட்டின் அதிபராகவும் மற்றும் ராணுவத்தின் தலைவராகவும் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.