ஹெலிகொப்டர் விபத்தின் பின்னணியில் சீனாவின் சதி! சர்ச்சையை கிளப்பிய சுப்ரமணியன் சுவாமி
தமிழகத்தில் இந்திய முப்படைகளின் தலைமை தளபதி உள்ளிட்டவர்கள் பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்தின் பின்னணியில் சீனாவில் சதி இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் சிரேஸ்ட அரசியல்வாதியான சுப்ரமணியன் சுவாமி இந்த சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
பிபின் ராவத் இறப்பு மிகப்பெரிய விஷயம். ஏனெனில், இராணுவத்தில் அவர் போன்ற உயர் பதவிகளில் இருக்கக்கூடிய அதிகாரிகளில் சிலர் தான் சீனாவைப் பற்றி வெளிப்படையாக கூறினார்கள்.
அரசுக்கு பயப்படாமல், சீனா, இந்தியாவிற்கு தொல்லை அளித்து வருகிறது, சீனா நமக்கு ஒரு ஆபத்து, சீனா நமது எல்லைக்குள் வந்து விட்டது என்று கூறியவர். இதனால் என்னைப் பொறுத்தவரை நான் இதை cyber warfare தாக்குதலாக இருக்கலாம் என்று கருதுகிறேன்.
ஏனெனில், லேசர் மூலமாக தொழில்நுட்ப மாறுபாடுகளை ஏற்படுத்த முடியும். இதுவும் அதுபோன்ற ஒன்றாக இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் உள்ளது. சீனா ஏற்படுத்தும் ஆபத்துகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டோம்.
தேச ஒருமைப்பாடு கேள்விக்குறியாகியுள்ளது. நாம் இந்த விஷயத்தில் கடுமையாக மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பாதுகாப்பு விஷயங்களில் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதேவேளை, நீலகிரி மாவட்டம் வெலிங்கடன் அருகே இராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. இதில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி, அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 13பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று காலை 11.00 - 11.30 மணியளவில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் இதுவரை 13 பேர் இறந்துள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
க்ரூப் கேப்டன் வருண் சிங் எனும் விமானப்படை அதிகாரி இப்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.