கொரோனா தொற்றிய சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது அதிகரிப்பு
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ஜீ.விஜேசூரிய (G.Wijesooriya) தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு சீமாட்டி றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் (Lady Ridgeway Hospital) தற்போது 50க்கும் மேற்பட்ட சிறார்கள் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சில சிறார்களுக்கு நோய் அறிகுறிகள் தென்படவில்லை. என்டிஜன் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த மூன்று மாதங்களில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிறார்கள் எவரும் உயிரிழக்காதது மகிழ்ச்சிக்குரிய விடயம். எனினும் நிலைமையை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் மக்கள் செயற்பட வேண்டும் எனவும் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவு கொரோனா நோயாளிகளால் நிரம்பியுள்ளதாக இதன் காரணமாக வைத்தியசாலைக்குள் புதிய கொத்தணி உருவாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இதற்கு முன்னர் சிறிய எண்ணிககையில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த போதிலும் தற்போது 24 தீவிர சிகிச்சைப் பிரிவு விடுதிகளில் சுமார் 300 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர் என கூறப்படுகிறது.