இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புக்களிடம் யாழ். முதல்வர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos)
“இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புக்கள் தமிழருக்கு நீதியான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறையிலான ஆட்சி அதிகாரத்தினை இலங்கை அரசு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் நிதி உதவிகளை அளிக்கவேண்டும் என்றும் அதற்கான அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்” என்று யாழ். முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரான்ஸ் நாடாளுமன்ற செயலாளருமாகிய ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கும் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இதில் கருத்து தெரிவித்த விஸ்வலிங்கம் மணிவண்ணன்
”நாங்கள் உங்களிடம் இரண்டு கோரிக்கைகளை முன்வைக்கின்றோம். ஒன்று தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான நீதியினைப் பெற்றுதருவதற்கு நீங்கள் துணை நிற்கவேண்டும்.
இரண்டாவதாக 30 வருட போரின் காரணமாக அழிக்கப்பட்ட எமது பிரதேசங்களை கட்டியெழுப்புவதற்கு தேவையான உதவிகளை நீங்கள் வழங்கவேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த பிரான்ஸ் நாடாளுமன்ற செயலாளார் ஜோன்ஸ் பிரான்சுவா,
“நாங்கள் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொள்ளுகின்றோம். பிரான்ஸில் உள்ள பல மாநகர சபைகள் இனப்படுகொலைத் தீர்மானங்களை நிறைவேற்றி அதனை எமக்கு அறியத்தந்திருக்கின்றன.
பிரான்ஸ் நாட்டில் தற்போது தமிழ்மக்கள் செறிந்து வாழ்கின்றனர். அவர்களுக்கு இலங்கையில் ஒரு நீதியான அரசியல் தீர்வைப்பெற்றுக்கொடுக்க பிரான்ஸ் நாடாளுமன்றம் தொடர்ந்தும் கரிசனையுடன் செயற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்மக்களின் அரசியல் பொருளாதார சமூக மேம்பாடுகள் மற்றும் மாநகர சபையின் செயற்பாடுகள் தேவைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டதுடன் பிரான்ஸ் நாடாளுமன்ற செயலாளார் ஜோன்ஸ் பிரான்சுவாவுக்கு யாழ்.மாநகர சபையின் சார்பில் நினைவுச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டது.
பிரான்ஸ் நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் நடைபெற்ற இச் சந்திப்பில் நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன்,
யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.







