பாடசாலை பைகளைச் சோதனையிடும்போது வெற்று உணவுப் பெட்டிகளையே காண முடிகிறது: சஜித் (Photos)
பாடசாலைகளில் போதைப்பொருள் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் சோதனை செய்கின்றது, இந்நிலையில் போதைப்பொருளுக்கு பதிலாக வெற்று உணவுப் பெட்டிகளைக் கொண்ட பைகள் மாத்திரமே காணக்கிடைக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு பேருந்து கையளிப்பு நிகழ்வின் போது இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், போதைப்பொருள் வியாபாரம் செய்யும் பெரும் புள்ளிகளைச் கைது செய்யாமல், சரியான ஊட்டச்சத்து இல்லாத பாடசாலை மாணவர்களின் பைகளைச் சோதனை செய்வது வேடிக்கையானது.
போதைப்பொருள்
பாடசாலை மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து,பெற்றோருக்கு உணவளிக்க வழியில்லாத நிலையில், பாடசாலை பைகளைப் பரிசோதிப்பதை விடுத்து, அவர்களுக்குச் சரியான போஷாக்கை அளிக்கும் திட்டத்தைத் தயாரிப்பதே அரசின் பணியாக இருக்க வேண்டும்.
எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்நாட்டில் உள்ள 43 இலட்சம் பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும் அவர்களின் பாடசாலை காலத்தில் போஷாக்கான உணவுவேளை வழங்கப்படும்.
இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானின் ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு குண்டுகள் வீசப்பட்டபோது, அந்நகரங்களில் பெரும் அழிவுகள் நிகழ்ந்த போதிலும் நவீன உலகுக்கு ஏற்ற கல்வி முறையை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ஜப்பான் மீண்டும் தலை தூக்கி உலகின் சக்தி வாய்ந்த நாடாக மாறியது.
பின்லாந்து போன்ற நாடுகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னோக்கிய கல்வித் திட்டங்களை உருவாக்கி மேம்பட்ட கல்வி பயணத்தை செயற்படுத்தி வருகின்றது.
பிரச்சினைகளுக்கான தீர்வு
கல்வியை வலுப்படுத்தியதன் மூலம் வியட்நாம் போன்ற நாடுகள் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் துறையில் பெரும் முன்னேற்றத்தை அடைந்துள்ளது. காலங்காலமாக, நம் நாட்டில் ஒரு மனப்பாட கல்வி முறையே உள்ளது.
நம் நாட்டுக்குப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கும் கல்வி முறையே தேவைப்படுகின்றது.
போஷாக்கில்லாத ஒரு சமூகமாக இந்தப் பாடசாலை மாணவர்கள் உருவெடுத்துள்ளார்கள்.
அவர்களுடைய சாப்பாட்டுப் பெட்டிகளைப் பரிசோதனை செய்வதை விட்டு அவர்களுக்கு எவ்வாறான திட்டங்களை வழங்க முடியும் என்று அரசாங்கம் கருத்திற்கொள்ள வேண்டும்.
இலவச கல்வி
ரணசிங்க பிரேமதாஸ இந்த நாட்டினுடைய அனைத்து மாணவர்களுக்கும் இலவச உணவு, இலவச சீருடைத் திட்டங்களை வழங்கிய ஒரு ஜனாதிபதியாவார்.
இலங்கையர்களாக சகோதரத்துவத்தோடு, நட்புறவோடு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான மனோபாவத்துடன் நாம் அனைவரும் செயற்பட வேண்டும்.
இலங்கை பெஸ்ட் என்பது எங்களுடைய ஒரு வேலைத்திட்டமாக இருக்கின்றது.
இருநூற்று இருபது இலட்சம் மக்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த நாட்டை உலகில் முதலிடத்துக்கு ஸ்தானப்படுத்துவதே எங்களுடைய கருத்திட்டம் என தெரிவித்துள்ளார்.




