சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் பதவி விவகாரம்.. நீதிமன்ற தீர்ப்பு குறித்து வெளியான தகவல்
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையில் இருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் எதிர்வரும் 5ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
எனினும், சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் வெற்றிடத்தை நிரப்ப உள்ளூராட்சி உதவி ஆணையாளரால் திட்டமிடப்பட்டுள்ள சபைக்கூட்டம் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள நிலையில், அதற்கு நீதிமன்றம் தடையேதும் விதிக்கவில்லை.
அதனால் சபையின் உப தவிசாளர் தெரிவு நாளை நடைபெற்று புதிய உப தவிசாளர் நளையே பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடைக்காலத் தடை
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளரின் நடத்தை தொடர்பில் ஆளுநரால் நியமிக்கப்பட்ட தனிநபர் விசாரணை அதகாரியின் விசாரணை அறிக்கையின் பரிந்துரைக்கு அமைய முன்னாள் உப தவிசாளரின் உறுப்புரிமை ஆளுநரால் வெறிதாக்கப்பட்டது.

இது தொடர்பான மாகாண ஆளுநரின் வர்த்தமானிக்கு தடை கோரி முன்னாள் உப தவிசாளர் ஞா.கிஷோர் சார்பில் கடந்த 6ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட் மனு இன்றைய தினமும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, தமது தரப்பு ஆட்சேபனையை மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மன்றில் நீண்ட சமர்ப்பணமாக சபையில் தொடர்ச்சியாக முன்வைத்தார். வாத இறுதியில் இந்த வழக்குக்கான தீர்ப்புக்காக எதிர்வரும் 5 ஆம் திகதி குறிப்பிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நாளைய தெரிவுக்கு இடைக்காலத் தடை ஏதும் நீதிமன்றம் பிறப்பிக்காத காரணத்தால் நாளை சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் தேர்வு இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.