காலாவதி திகதியில் மாற்றம் செய்த விநியோகஸ்தர் - நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (PHOTOS)
குளிர்பானம் போத்தல்களின் காலாவதி திகதியில் மாற்றம் செய்த விநியோகஸ்தருக்கு 110,000/= தண்டத்துடன் வியாபார அனுமதியை இரத்து செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநகர ஆணையாளரிற்கு நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கடந்த மாதம் 26.04.2023 அன்று யாழ். நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து யாழ். நகர் கடைகளில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது திகதியில் மாற்றம் செய்து குளிர்பானம் போத்தல்கள் யாழ். நகர் கடைகளிற்கு விநியோகிக்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து கடைகளிற்கு விநியோகிக்கப்பட்ட குளிர்பான போத்தல்களை கைப்பற்றிய பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த விநியோகஸ்தரின் களஞ்சியசாலையினை முற்றுகையிட்டு திடீர் பரிசோதனை மேற்கொண்டுள்ளனர்.
காலாவதி திகதியில் மாற்றம்
இதன்போது காலாவதி திகதியில் மாற்றம் செய்த 1100 குளிர்பான போத்தல்கள் விநியோகத்திற்காக தயார் நிலையில் இருந்த போது கைப்பற்றப்பட்டதுடன், திகதி காலாவதியான குளிர்பான போத்தல்களும், 1710 மனித பாவனைக்கு உதவாத குளிர்பான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து குறித்த விநியோகஸ்தரிற்கு எதிராக யாழ். நகர் பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவனால் கடைகளிற்கு விநியோகம் செய்தமை தொடர்பில் 02 வழக்குகளும், பொது சுகாதார பரிசோதகர் தி.கிருபனால் களஞ்சியசாலை குறைபாடுகளுக்காக ஒரு வழக்கும் என 03 வழக்குகள் நேற்றைய தினம் 24.05.2023 மேலதிக நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து 03 வழக்குகளுக்கும் குறித்த விநியோகஸ்தரை குற்றவாளியாக அடையாளம் கண்ட நீதிமன்றம் 110,000/= தண்டத்தினை விதித்துள்ளது.
அத்துடன் யாழ். மாநகர சபையால் குறித்த விநியோகஸ்தரிற்கு வழங்கப்பட்ட வியாபார அனுமதியை இரத்து செய்வதற்குரிய பரிந்துரையினை, 03 வழக்குகளிற்கும் தனித்தனியே யாழ். மாநகர சபை ஆணையாளரிற்கு வழங்கி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.