ஹிஸ்புல்லா இடித்த காளி கோயிலை சாணக்கியன் கட்ட முடியுமா
மகிந்தவுடன் இருக்கும் போது போர்குற்ற விசாரணையை கேட்டிருக்க வேண்டிய இரா.சாணக்கியன் தற்போதைய ஆட்சியாளரிடம் சர்வதேச விசாரணையை கோருவது நகைப்புக்குரிய விடயம் என ஈபி.டி.பி கட்சி ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அப்போது மகிந்தவிடம் கேட்டிருந்தால் அவர் நல்ல பதில் தந்திருப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று (24) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பூச்சாண்டி அரசியல்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த பூச்சாண்டி அரசியலை விட்டுவிட்டு மக்களுக்கு நலன் சார்ந்த அரசியலில் ஈடுபடுங்கள்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததன் காரணமாக அவர் என் மீது தொடர்ச்சியாக கடந்த 6 மாத காலமாக பொய்யான குற்றச்சாட்டுகளை அபிவிருத்தி குழு தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கு முன்வைத்து வருகிறார்.
அவர் சாட்சியங்களை அச்சுறுத்துவதற்காக செயற்படுகின்றார் என்பதால் மீண்டும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் சாட்சியங்களை பாதுகாக்கும் பிரிவில் அவருக்கு எதிராக மேலும் ஒரு முறைப்பாடு செய்துள்ளேன்.
சர்வதேச போர்க்குற்ற விசாரணை
கடந்த 4 வருடங்களாக நாடாளுமன்றத்தில் இருக்கும் நீங்கள் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு என்ன நன்மைகள் செய்திருக்கிறார்.

பாலமீன்மடுவில் ஒரு தடவையில் 300 மேற்பட்ட படகுகள் தரித்து நிற்கும் மீன் சந்தையை புனரமைக்குமாறு பல தடவைகள் கடற்றொழில் சங்கங்கள் கடிதம் மூலம் நிதி கோரியிருந்தனர், ஆனால் அபிவிருத்திக்கு வந்த எந்த நிதியும் பாலமீன்மடு கிராமத்துக்கு வழங்கவில்லை.
தற்போதைய ஆட்சியாளரிடம் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கோருகின்றீர்கள் இது நகைப்புக்குரியது.
நீங்கள் மகிந்தவின் மடியில் தவளும்போது போர் குற்றம் செய்த அவரிடம் விசாரணையை கேட்டிருக்க வேண்டும். அப்போது கேட்டிருந்தால் அவர் நல்ல பதில் தந்திருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.