போக்குவரத்து சபையின் தலைவரை பதவி விலகுமாறு உத்தரவு
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸ்லி ரணவக்கவை உடனடியாக பதவி விலகுமாறு அமைச்சர் பந்துல குணவர்த்தன உத்தரவிட்டுள்ளார்.
கொழும்பில் வாகன போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில் கடந்த காலத்தில் சிட்டி ரைடர் எனும் குளிரூட்டப்பட்ட பேருந்து சேவையொன்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
கொழும்பின் புறநகர்ப்பகுதியான கொட்டாவையில் இருந்து கொழும்பின் கோட்டை வரை வெவ்வேறு வழித்தடங்கள் ஊடாக குறித்த பேருந்து சேவை நடத்தப்பட்டது.
உடனடியாக பதவி விலகுமாறு உத்தரவு
குறித்த பேருந்து சேவையின் மூலம் அரசாங்கம் எதிர்பார்த்த அளவில் இலாபம் ஈட்டிக்கொள்ள முடியாது போன நிலையில் போக்குவரத்துச் சபை அதனை இடைநிறுத்தியிருந்தது.
எனினும் அரசாங்கம் அல்லது போக்குவரத்து அமைச்சுக்கு அறிவித்து கலந்தாலோசனை நடத்தாமல் சிட்டி ரைடர் பேருந்து சேவையை இலங்கை போக்குவரத்துச்சபை தன்னிச்சையாக இடைநிறுத்தியமை அரசாங்கத்தை அதிருப்திக்குள்ளாக்கி உள்ளது.
அதன் எதிரொலியாக போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க மற்றும் அதன் பணிப்பாளர் சபையை உடனடியாக பதவி விலகுமாறு போக்குவரத்து மற்றும் வெகுசனத் தொடர்பு அமைச்சர் பந்துல குணவர்த்தன உத்தரவிட்டுள்ளார்.