தமிழர் தாயகத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுஷ்டிப்பு (Video)
தமிழர் தாயக பகுதியில் இன்று (27.11.2022) மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நினைவு தினம் தமிழர் தாயகத்தின் விடிவுக்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மாவீரர் துயிலும் இல்லங்கள் அமைந்துள்ள நிலப்பரப்புகளில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்காக துயிலும் இல்லங்கள் அல்லது அதற்கு அருகில் மாவீரர் நாளைக் கடைப்பிடிக்கும் இடங்களை சிறுவர்கள் மற்றும் பெரியோர் பிரதேச மக்கள் அனைவரும் துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய தமிழர் தாயகத்தில் 30 பிரதான இடங்களில் இன்று மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் கோப்பாய் துயிலும் இல்லம், சாட்டி துயிலும் இல்லம், உடுத்துறை துயிலும் இல்லம், கொடிகாமம் துயிலும் இல்லம், முல்லைத்தீவு கடற்கரை முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லம், இரட்டைவாய்க்கால் துயிலும் இல்லம், பச்சைபுல்மோட்டை துயிலும் இல்லம் என 30 பிரதான துயிலும் இல்லங்களில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நந்திக்கடலில் மாவீரர்களுக்கு அஞ்சலி
தாயக விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (27.11.2022) நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதன்போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல்.
ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, தாயக விடுதலைக்காக உயிர்நீத்த எங்கள் மாவீரச் செல்வங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்துகின்றேன் என தெரிவித்துள்ளார்.
செய்தி: குமனன்
வல்வெட்டித்துறையில் நினைவேந்தல்
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று (27.11.2022) பல பகுதிகளிலும் நடைபெறவுள்ள நிலையில் முதல் மாவீரர் சங்கரின் வீட்டில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறையில் உள்ள சங்கரின் இல்லத்தில் ஈகைச்சுடரேற்றி நினைவேந்தல் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த போராளி பண்டிதரின் இல்லத்தில் இன்றைய தினம் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன் போது மூத்த போராளி பண்டிதரின் தாயாரும் பங்குகொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
செய்தி: தீபன்
கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இடத்தில் தற்பொழுது இராணுவத்தின் 51 ஆவது படைப்பிரிவு செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்றையதினம் (27) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் தலைமையில் 51ஆவது படைப்பிரிவு தலைமையகத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைய, இராணுவத்தின் 522 ஆவது பிரிகேட் நுழைவாயிலில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தலைமையிலான குழுவினரால் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
மேலும் உடுப்பிட்டி - எள்ளங்குளம் மாவீரா் துயிலும் இல்லத்திற்கு அருகிலும்,நெல்லியடி மகா வித்தியாலத்தின் முன்பாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் அவருடைய குழுவினரால் மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.
செய்தி: கஜிந்தன், தீபன்