நாட்டு மக்களுக்கு பொலிஸ்மா அதிபரின் முக்கிய அறிவிப்பு
நாட்டு மக்களுக்கு பொலிஸ்மா அதிபர் சி.டீ.விக்ரமரத்ன முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
அதன்படி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் காணப்பட்டால் அவற்றை எவ்வித அச்சமும் இன்றி குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தகவல்களை வழங்குபவர்களின் இரகசிய தன்மை பேணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சகல விசாரணைகள் குறித்தும் அண்மையில் விசேட அறிவிப்பை விடுத்திருந்தேன். அதன்போது சகல காரணிகள் தொடர்பிலும் தெளிவுபடுத்தப்பட்டது.
எனவே இது தொடர்பில் ஏதேனும் தகவல்கள் பொது மக்களிடம் காணப்பட்டால் அவற்றை எவ்வித அச்சமும் இன்றி குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.
அவ்வாறு வழங்கப்பட்டால் அவை தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுக்க முடியும். இதேவேளை போதைப்பொருள் தொடர்பிலும் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதற்கமைய போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் சொத்துக்கள் தொடர்பில், அதாவது வாகனங்கள், காணிகள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் பறிமுதல் செய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பொலிஸாருக்கு சகல விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தகவல்களே தேவைப்படுகின்றன. எனினும் தகவல்களை பொலிஸாருக்கு வழங்கினால் தகவல்களை வழங்குபவர்கள் தொடர்பில் தவறிழைப்பவர்களுக்கு அறிவிக்கப்படும் என்று சிலர் கருதுகின்றனர்.
ஆனால் தகவல்கள் வழங்குபவர்கள் தொடர்பான இரகசிய தன்மை பேணப்படும் என்று உறுதியளிக்கின்றோம். இவ்வாறு தகவல்களை வழங்குவதற்கு 1997 மற்றும் 119 என்ற இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கு வழங்கப்படும் தகவல்கள் தொடர்பான இரகசிய தன்மை பேணப்படும். எனவே சமூகத்தில் இடம்பெறுகின்ற சட்ட விரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல்களை தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.