வெலிக்கடை, அனுராதபுர சிறைச்சாலைகளின் சீ.சீ.ரீ.வி கமராக்கள் தொடர்பில் வெளியான தகவல்
வெலிக்கடை மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலைகளில் சீ.சீ.ரீ.வி. கமரா கட்டமைப்புக்கள் கிடையாது என சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.
பூசா, அங்குனுகொலபெலஸ்ஸ மற்றும் களுத்துறை சிறைச்சாலைகளில் சீ.சீ.ரீ.வி. கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, சிறைச்சாலை முகாமைத்துவம் மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய லொஹான் ரத்வத்தே அண்மையில் இந்த சிறைச்சாலைகளுக்குள் பிரவேசித்து குழப்பம் விளைவித்தார் என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சீ.சீ.ரீ.வி கமரா காணொளிகளின் அடிப்படையில் விசாரணை நடாத்தப்படாது என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், அனைத்து சிறைச்சாலைகளிலும் யாரேனும் சிறைச்சாலைக்குள் பிரவேசித்தால் அது குறித்து லொக் புத்தகத்தில் பதிவிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 12ம் திகதி லொஹான் ரத்வத்தே அனுராதபுரம் சிறைச்சாலையில் அரசியல் கைதி ஒருவரை மண்டியிடச் செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், அந்த சம்பவத்தினைத் தொடர்ந்து லொஹான் ராஜாங்க அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.