வவுணதீவிலிருந்து காத்தான்குடிக்கு மாடு கடத்தல் - நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்திலிருந்து காத்தான்குடி பிரதேசத்திற்குச் சட்டவிரோதமாக ஜீப் வண்டியில் மாடுகளைக் கடத்திக் கொண்டு சென்ற சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 3 பேருக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் 17 ஆயிரத்து 100 ரூபா அபராதம் விதித்து மீட்கப்பட்ட 6 மாடுகளையும் அரசு உடைமையாக்கி நீதவான் உத்தரவிட்டு தீர்ப்பளித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை (21) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வியாழக்கிழமை (06) அதிகாலை வவுணதீவு பிரதேசத்திலிருந்து ஜீப் ரக வாகனத்தில் காத்தான்குடி பிரதேசத்திற்கு 6 மாடுகளைக் கடத்திச் சென்ற ஜீப் ரக வாகனத்தை வலையிறவு பாலத்துக்கு அருகில் பொலிஸார் மடக்கிப்பிடித்ததுடன், 3 பேரைக் கைது செய்து, கடத்திச் செல்லப்பட்ட 6 மாடுகளையும் ஜீப் ரக வாகனம் ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இதில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை நேற்று வெள்ளிக்கிழமை (21) நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதவான் உத்தரவிட்டு பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நீதிமன்றில் குறித்த வழக்கு எடுக்கப்பட்டபோது கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் தலா 5 ஆயிரத்து 700 வீதம் 17 ஆயிரத்து 100 ரூபா அபராதமாகச் செலுத்துமாறும், மீட்கப்பட்ட 6 மாடுகளையும் அரசுடைமையாக்கியதுடன் கடத்தலுக்குப் பாவிக்கப்பட்ட ஜீப் ரக வாகனம் தொடர்பாகப் பூரண விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுத் தீர்ப்பளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரசுடைமையாக்கிய மாடுகளை அனுராதபுரத்திலுள்ள அரச
மாட்டுப்பண்ணைக்கு இன்று சனிக்கிழமை (21) வவுணதீவு பொலிஸ் நிலையத்திலிருந்து
வாகனத்தில் ஏற்றப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
நிசந்த அப்புகாமி தெரிவித்துள்ளார்.

