உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கடிதம்
இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு புதிய கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த கடிதத்தில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைவதற்கு உள்ளூர் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர்களான கர்தினால் மல்கம் ரஞ்சித் உட்பட பல ஆயர்கள் கையெழுத்திட்ட, இந்த கடிதத்தில், முந்தைய விசாரணைகள் முக்கியமான பிரச்சினைகளை புறக்கணித்ததாகக் கூறப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை
அத்துடன் சோனிக் என அடையாளம் காணப்பட்ட ஐபி பண்டாரவின் விசாரணையை நிறுத்தியமை, அபு ஹிந்தை அடையாளம் காணத் தவறியமை, அமெரிக்க எஃப்.பி.ஐ உளவுத்துறை உறுப்பினரால், குற்றப் புலனாய்வுத்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் போது குண்டுதாரி ஜெமிலுக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இருந்த தொடர்பு மற்றும் கலனிகம வெளியேறும் இடத்தில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட லொறி ஒன்று கடந்து செல்ல அனுமதிக்கப்பட்ட சம்பவம் போன்றவை தொடர்பில் உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
"இராணுவப் புலனாய்வு இயக்குநரகம் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை
சஹ்ரானுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தன என்பது தெளிவாகிறது.
இந்த விசாரணைகளைத் தடுக்கவும் நாசவேலை செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன" என்றும் இந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிநாட்டு பார்வையாளர்கள்
இதேவேளை சனல் 4 காணொளியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் குழு கோரியுள்ளது. இந்த விசாரணையை சுதந்திரமான வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் முந்தைய கடிதத்திற்கு ஜனாதிபதி இன்னும் பதிலளிக்கவில்லை என்று அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்




