ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம்! ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆகியோருக்கு எதிராக வழக்கு
கோவிட் கட்டுப்பாடுகளை மீறி கூட்டம் நடத்தியதாக தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக 65 தொகுதிகளில் வென்று, பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. எனினும், எதிர்க்கட்சி தலைவராக யார் தெரிவு செய்யப்படுவார் என்பதில் இழுபறி நிலவியது.
இந்நிலையில் சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவரைத் தெரிவு செய்ய நேற்று சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தெரிவுசெய்யப்பட்டார். கோவிட் பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோவிட் ஊரடங்கு தடையை மீறி அதிமுக தலைமையகத்தில் அதிகளவில் கூட்டம் கூடியதாக முறைப்பாடு எழுந்தது.
இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட 250 பேர் மீது ராயப்பேட்டை பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அவர்கள் மீது தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.