டயனா கமகேவின் பதவி தொடர்பான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான தீர்ப்பு, மேல்முறையீட்டு நீதிமன்றினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் ஜுலை 25 ஆம் திகதி மனுமீதான தீர்ப்பு வழங்கப்படும் என்று இன்றைய தினம் நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதியரசர்களான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் எம். ஏ. ஆர். மரிக்கார் ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்த மனுவில் குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இலங்கைப் பிரஜாவுரிமை
பிரித்தானியப் பிரஜை எனக் கூறப்படும் டயனா கமகே இலங்கைப் பிரஜாவுரிமையைப் பெறாத காரணத்தினால் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கத் தகுதியற்றவர் என உத்தரவிடக்கோரி சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் என்பவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் இன்றைய தினம் தீர்ப்பு வாசிக்கப்படுவதற்காக நீதிமன்றத்தில் வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது , எதிர்வரும் ஜூலை மாதம் 25ம் திகதி வரை தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |