மட்டக்களப்பில் 10 மாதங்களில் 398 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு: மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து நவம்பர் முதலாம் திகதி வரையிலான 10 மாதங்களில் 398 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்குதல் செய்யப்பட்டுள்ளதுடன், தண்டப்பணமாக 26 இலட்சத்து 23 ஆயிரம் ரூபா செலுத்தியுள்ளதாக மாவட்ட நுகர்வேர் அதிகாரசபை உதவி பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சதாத் தெரிவித்துள்ளார்.
வழக்குகள்
மட்டக்களப்பு பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்களை ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் நவம்பர் மாதம் முதலாம் திகதிவரை நுகர்வேர் அதிகாரசபை முற்றுகையிட்டு அங்கு கட்டுப்பாட்டு விலையைவிட அதிகமாக விற்பனை செய்தவர்கள், காலாவதியான பொருட்கள் மற்றும் பொதி செய்யப்பட்ட பொருட்களில் விலை உற்பத்திகாலம் போன்ற முத்திரை இல்லாது வர்த்தகத்தில் ஈடுபட்ட 398 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்குதல் செய்யப்பட்டது.
தண்டப்பணம்
இவ்வாறு இவர்களுக்கு எதிராக செய்யப்பட்ட வழக்கில் குற்றத்தை ஒப்புக் கொண்ட வர்த்தகர்களுக்கு நீதிமன்றம் தண்டப்பணம் செலுத்துமாறு உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
இந்த தண்டப்பணமாக 26 இலட்சத்து 23 ஆயிரம் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.