தந்தை வெளிநாட்டில்: தாயுடன் காரில் பயணித்த மகளுக்கு நேர்ந்த பரிதாபம்
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பயணித்த கார் விபத்திற்கு உள்ளானதில் சிறுமியொருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (23.06.2025) அதிகாலை 4.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார்
குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் மட்டக்களப்பு சின்ன ஊறணி பகுதியை சேர்ந்த ஜெந்திரகுமார் சஞ்சய், 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்துவரும் நிலையில் உயிரிழந்த சிறுமியான மகளுடன் கருவப்பங்கேணியில் உள்ள அவர்களது பன்றிவளர்க்கும் பண்ணையை பார்ப்பதற்காக இன்று அதிகாலை கார் சாரதியுடன் பயணித்தபோது விபத்து இடம்பெற்றுள்ளது.
விசாரணை முன்னெடுப்பு
படுகாயமடைந்த பெண் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
