ஷிரந்தி தொடர்பில் தகவல் வழங்க மறுத்த மகிந்தவின் ஊடகப் பிரிவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச தற்போது எங்கு இருக்கிறார் என கூற முடியதென மகிந்தவின் ஊடகப் பேச்சாளரான மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி தொடர்பான தகவலை வெளியிட அவரது குடும்பத்தினர் தயாராக இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மகிந்த ராஜபக்சவை கவனித்துக் கொள்ளும் நோக்கில் விரைவில் அவர் நாடு திரும்புவார் என குறிப்பிட்டுள்ளார்.
அழைப்பாணை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ச எதிர்வரும் 24 ஆம் திகதி பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அவர் நேற்று முன்தினம் அதிகாலை சிங்கப்பூருக்குப் புறப்பட்டுச் சென்றார்.
நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றதாக மனோஜ் கமகே தெரிவித்தார்.
நேற்று முன்தினம் அவர் நாட்டை விட்டு வெளியேறும்போது விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவின் அழைப்பாணையை அவர் பெற்றுக்கொண்டதாகவும் கமகே குறிப்பிட்டார்.
இதேவேளை சிங்கப்பூரில் நேற்றையதினம் ஆடம்பர ஆடைகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கையில் சுற்றித்திரிந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.