நிதியமைச்சின் செயலாளரை தடுத்தவர்களை, விமர்சித்துள்ள ஐக்கிய தேசியக்கட்சி!
ஐக்கிய தேசியக்கட்சி விமர்சனம்
தனிஆட்கள் குழுவொன்று நிதி அமைச்சைச் சுற்றி வளைத்து நிதியமைச்சின் செயலாளரை சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தைக்கு செல்லவிடாமல் தடுக்க முயற்சியை ஐக்கிய தேசியக்கட்சி விமர்சித்துள்ளது.
இந்தநிலையில் நாட்டின் பொருளாதார மீட்சி முயற்சிகளை சீர்குலைப்பதை அனுமதிக்க முடியாது என்று ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் டினூக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
மறைமுக அரசியல்
ஆர்ப்பாட்டக்காரர்கள் நாட்டில் உண்மையான மாற்றத்திற்கு அழைப்பு விடுக்கும் குழுக்களின் ஒரு பகுதியினர் அல்ல, மாறாக மறைமுக அரசியல் நோக்கங்களைக் கொண்டவர்கள் என்று அவர் ஒரு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் போராட்டங்கள் நிறுத்தப்படாது. எனினும் பொருளாதார நெருக்கடியால் முழு நாடும் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில், பொருளாதார மீட்பு முயற்சிகளை சீர்குலைக்க இதுபோன்ற குழுக்களை அனுமதிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் பிரதமருடன் கலந்துரையாடுவதற்காக சர்வதேச நாணய நிதியம் இன்று நாட்டிற்கு வந்துள்ளது என்றும் டினூக் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.