'கறுப்பு ஜனவரி' தினத்தையிட்டு ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
'கறுப்பு ஜனவரி' தினத்தை முன்னிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை 05 மணிக்கு மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள உயிர்நீத்த ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏந்தி நீரி வேண்டி போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு.ஊடக அமையம், அம்பாறை மாவட்ட ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தொழில்சார் ஊடகவியலாளர் சங்கம், கிழக்கு மாகாண தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி மாலை 3.00 மணிக்குக் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாகவும் ஜனவரி 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திலும் கவனயீர்ப்பு போராட்ட நடவடிக்கையொன்றை மேற்கொள்வதற்கும் ஊடக அமைப்புகளின் கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நிலையில் மட்டக்களப்பிலும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை 05 மணிக்கு இந்த நிகழ்வினை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், 'படுகொலை செய்யப்பட்ட, காணாமல் ஆக்கப்பட்ட, தாக்கப்பட்ட மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதியை நிலைநாட்டுங்கள்' என்பதே இவ்வருடத்திற்கான கறுப்பு ஜனவரியின் தொனிப்பொருளாகும்.
இதனை முன்னிட்டு மெழுகுவர்த்தியை ஒளிரச்செய்து ஊடகவியலாளர்களின் நியாயமான
கோரிக்கையினை வெளிப்படுத்தவுள்ளதுடன் துண்டுப்பிரசுரமொன்றும்
விநியோகிக்கப்படவுள்ளது எனவே அதில் அனைத்து ஊடகவியலாளர்களும் கலந்துகொள்ளுமாறு
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.