யாழில் வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யக் கோரும் மக்கள்
யாழ்ப்பாணம் (Jaffna) -வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி செந்தூரனின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரி விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (23) வைத்தியசாலையில் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் பவானந்தராஜாவுக்கும் நோயாளர் நலன்புரிச் சங்கத்தினருக்கும் மற்றும் சமூகமட்ட அமைப்பினருக்கும் இடையில் நடைபெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலின்போது மக்கள் கருத்து தெரிவிக்கையில், குறித்த வைத்தியசாலை பிரதேச வைத்தியசாலை தரத்தில் காணப்படுன்றது. ஆனால் அதற்குரிய ஆளணி வசதிகள் காணப்படுவதில்லை. இருப்பினும் கட்டட வசதிகள் தாராளமாக உள்ளன.

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மருத்துவ வசதி
கடந்த காலங்களில் 24 மணிநேர மருத்துவ வசதிகளும், சிகிச்சைகளும் காணப்பட்டன. ஆனால் பின்னர் அவை எல்லாம் இடைநிறுத்தப்பட்டன.
இருப்பினும் தற்போது கடமையில் இருக்கின்ற பொறுப்பு வைத்திய அதிகாரி செந்தூரனின் முயற்சியாலேயே மீண்டும் நோயாளர் விடுதி இயக்கப்படுகின்றது. இந்த வைத்தியசாலையை பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்துகின்றனர்.
24 மணிநேர மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் மக்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கும், சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கும் செல்ல வேண்டி ஏற்படுகிறது. அந்த வைத்தியசாலைகளில் விடுதிகளில் கட்டில் தட்டுப்பாடுகள், இடவசதி பிரச்சினைகள் காணப்படுகின்றன.
இவ்வாறான சூழ்நிலையில் எங்களது வைத்தியசாலையில் 24 மணிநேர மருத்துவ சேவையை ஆரம்பித்தால் மக்கள் அலைச்சல் இல்லாமல் இங்கேயே சேவையை பெற முடியும். அத்துடன் அந்த வைத்தியசாலைக்கும் வேலைச்சுமை குறையும்.
மக்கள் கோரிக்கை
புதிதாக பதவியேற்றுள்ள பொறுப்பு வைத்திய அதிகாரி எமது வைத்தியசாலைக்கு வருகை தந்து ஒன்றரை வருடங்களே ஆகின்றன. ஆனால் அவர் அந்த காலப்பகுதிக்குள் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டுள்ளார்.இன்னும் சிறிது காலம் அவர் எமது வைத்தியசாலையில் வேலை செய்தால், எமது வைத்தியசாலையின் சேவைகளை முழுமைப்படுத்தி விடுவார்.
அதன்பின்னர் யார் வைத்திய பொறுப்பதிகாரியாக வந்தாலும் அந்த சேவைகளை இலகுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும். மக்களுக்கு சேவை செய்வதற்கே அனைத்து அரச திணைக்களங்களும், அரச அதிகாரிகளும் உள்ளனர்.
எனவே மக்களாகிய எமது கோரிக்கைகளை செவிமடுத்து எமது வைத்தியசாலையின் முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் முகமாக குறித்த வைத்திய அதிகாரியின் இடமாற்றத்தை இடைநிறுத்தி அல்லது தள்ளிப்போட்டு மக்களது நலனிலும் வைத்தியசாலையின் வளர்ச்சியிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்றனர்.
அத்துடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரையும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளித்தனர்.
மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்து நாடாளுமன்ற உறுப்பினர், அவர்களது கோரிக்கை தொடர்பாக உரிய தரப்பினருடன் கலந்தாலோசிப்பதாக உறுதியளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam
