அரசியல் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய கனேடிய பிரதமரின் கருத்து! அரசாங்கத்தை சாடும் தமிழ் தரப்பு
பொறுப்புக்கூறல் விவகாரத்தை பொறுத்தமட்டில் இதுவரையில் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை. அவ்வாறு முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கை நடுநிலையுடன் இருக்கவேண்டுமானால், அது சர்வதேச பொறிமுறையாக அமையவேண்டியது அவசியம் என்று தமிழரசு கட்சியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி வெளியிட்ட கருத்தை கடுமையாக கண்டித்து நிராகரிப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.
எவ்வித ஆதாரங்களுமின்றி முன்வைக்கப்படும் 'இனப்படுகொலை' தொடர்பான குற்றச்சாட்டுக்கள் இலங்கையர்களை துருவமயப்படுத்துவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொறுப்புக்கூறலை உறுதிசெய்தல்
இவ்வாறானதொரு பின்னணியில் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையிலேயே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னரான கடந்த 14 வருடங்களில் அரசாங்கம் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் காலந்தாழ்த்திவிட்டு, அதனை ஏனைய சர்வதேச நாடுகள் வலியுறுத்திக் கூறியவுடன் கோபப்படுவதில் அர்த்தமில்லை.
மேலும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதில் முன்னின்று செயற்பட்ட நாடுகளில் கனடாவும் ஒன்று. கனடா மாத்திரமன்றி ஏனைய சர்வதேச நாடுகளும் இவ்விடயத்தை வலியுறுத்தி வருகின்றன.
எவ்வித முன்னேற்றகரமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாத பட்சத்தில் சர்வதேச சமூகம் நிச்சியமாக அழுத்தம் பிரயோகிக்கும்.”என தெரிவித்துள்ளார்.
செல்வராஜா கஜேந்திரனின் கருத்து
இதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றது என்ற உண்மையை கனடா ஏற்றுக்கொண்டமையை வரவேற்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான பொறுப்புக்கூறல் என்பது கடந்த 12 வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்குள்ளேயே முடங்கிப்போயிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
எனவே, இவ்விடயத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ அல்லது சர்வதேச நீதிமன்றத்துக்கோ கொண்டுசெல்வதற்கான தலைமைத்துவத்தை வழங்க கனடா முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் இலங்கையில் கடந்த காலங்களில் நடைபெற்று முடிந்த விடயங்கள் தொடர்பில் கனடா கவலையை வெளிப்படுத்தியுள்ளமை ஆறுதலளிக்கின்ற போதிலும், தற்போது நாட்டில் இடம்பெற்றுவரும் கட்டமைப்பு ரீதியான இன அழிப்புக்கு எதிராக கனடா முன்நின்று செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்திற்கு தண்டனை கிடைத்தால் இத்தனை வருடம் ஜெயிலா? Cineulagam

Record Breaking வியாபாரம் ஆனது ரஜினியின் கூலி படம்... யார் எத்தனை கோடிக்கு வாங்கியுள்ளார்கள் தெரியுமா? Cineulagam
